மு.க.ஸ்டாலின் கைது தமிழகம் முழுக்க பதட்டம்.
பல்வேறு வழக்குகளில் திமுகவின் முன்னணி தலைவர்கள் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த கைது நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு தொடங்கி வேகம் பெற்றுள்ளது. தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நேற்றிலிருந்து கைது செய்யப்பட்டு வருகிற நிலையில் திருவாரூர் மாவட்டச் செயலாளார் பூண்டி கலைவாணனை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது ஏராளமான திமுகவினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், திமுகபொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்கு முன்னார் அவரது காரை ஏராளாமான போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் அவரை கைது செய்வதாக அறிவித்த்து கைதும் செய்தனர்.
இதனால் தமிழக முழுக்க பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.தஞ்சை, திருவாரூர்,சேலம்.நாமக்கல் போன்ற இடங்களிலும் ஒட்டு மொத்தமாக பேருந்து சேவைகள் முடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூண்டி கலைவாணனை கைது செய்யக்கூடாது என்று ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், பூண்டி கலைவாணனை போலீசிடம் ஒப்படைக்கக் கோரி ஸ்டாலினை கைது செய்துள்ளாதாகவும் தெரிகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் - அன்பழகன் கைது - சேலத்தில் பதட்டம்:
30 .07. 2011 -நில மோசடி வழக்கு தொடர்பாக விரைவில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் பரவிக்கிடந்த நிலையில் நேற்று சேலத்தில் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார் வீரபாண்டி ஆறுமுகம். அங்கமாள் நகர் மற்றும் பிரிமியர் மில் நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 25.07.2011 மற்றும் 26.07.2011, 27.07.2011 ஆகிய மூன்று நாட்களும் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உட்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், 27ஆம் தேதி மாலை நீதிமன்றத்தால் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்ற நிபந்தனைப்படி மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் கையொப்பம் இடவேண்டும் என்று நிபந்தனையுடன் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் 30.07.2011 அன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்த சேலம் போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியே அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்கள். வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதை அடுத்து சேலம் மாவட்டம் முழுக்க பதட்டம் நிலவுகிறது. சேலம் நகரில் பல பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் சேலம் நகரில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
திமுக பிரமுகர் அன்பழகனும் கைது.
அடுத்தடுத்து கைதுகளால் நிலை குலைந்து போயுள்ள திமுகவினர் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகனையும் போலீசார் கைது செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. திநகர் வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது போலீசார் அவரைக் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அன்பழகனை கைது செய்து திருப்பூர் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது. இது திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.