அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தில் கையெழுத்திடாத இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
சனல் 4 தொலைக்காட்சி செய்தியில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் உயர்மட்டம் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் வந்தருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிபிசி தொடர்பு கொண்டு போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அரசாக அங்கீகரிக்கும் போக்கை தெற்கு சூடான் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் மற்றும் வெளியுறவு மற்றும் பொதுநலவாயம் தொடர்பான துணை அமைச்சர் அலெஸ்ட்டார் பேர்ட் ஆகியோரையும் சந்தித்துள்ள ரணில் விக்ரமசிங்க, அவர்களுடன் எதுபற்றி பேசினார் என்று பிபிசி சார்பில் கேட்கப்பட்டது.
குறிப்பாக, இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்தே பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் ரணில் கூறினார்.
இலங்கையின் பிரச்சனையை, முடிந்தால் இலங்கைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவே முயற்சிக்க வேண்டும் என்று தமது நிலைப்பாட்டைக் கூறியதாக தெரிவித்த ரணில், அரசியல் தீர்வுத்திட்டம் பற்றி பேச்சு நடத்தி, இழக்கப்பட்ட உயிர்களுக்காக என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று ஆராய வேண்டும் என்று எடுத்துரைத்ததாகவும் பிபிசியிடம் கூறினார்.
தமது சந்திப்பில், சானல் 4 செய்திகள் பற்றி பேச்சு நடத்த வில்லையென்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளாத போது, போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு இலங்கை செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்று கருத்து தெரிவித்தார்.
அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டால், போர்க்குற்றம் தொடர்பான பிரச்சனைகளையும் பேசித்தீர்த்துக் கொள்ளமுடியும் என்ற தொனியிலும் ரணில் விக்ரமசிங்க பதில் கூறினார்.
இதற்கிடையே, புதிதாக மலர்ந்துள்ள தெற்கு சூடானை பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்பதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தெற்கு சூடான் தொடர்புகளை வைத்திருந்ததாலேயே தமது அதிருப்தியை தெரிவித்ததாக ரணில் கூறினார்.
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை தெற்கு சூடான் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற ரீதியில் தமது கருத்தை முன்வைத்ததாக அவர் கூறினார்.