மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள், பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர், அவர்களது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர். "என்மீது நம்பிக்கை கொண்டு என்னைத் தெரிவு செய்த பெற்றோர், மார்க்கம் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றியுடன் இருப்பதுடன் என்மீது நீங்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கையினை எனது ஆதாரமாகக் கொண்டு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்துவேன். அதுமட்டுமல்லாது எங்கள் சமூகத்தினைச் சேர்ந்த பெற்றோருக்கும் பாடசாலைச் சமுகத்தினருக்கும் ஓர் நல்லுறவினையும் தொடர்பினையும் ஏற்படுத்த நான் ஒரு பாலமாக இருப்பேன்" என தனது உரையில் செல்வி யுணிற்றா நாதன் குறிப்பிட்டார்.
செல்வி யுணிற்றா நாதன் 60% உம் அதிகமான வாக்குகளினால் இத் தேர்தலில் வெல்வதற்குக் காரணமாக இருந்தது எமது சமுகத்தினரிடம் மட்டுமல்லாது, பல்லின சமுகத்தினரிடையேயும் அவருக்கு இருந்த மதிப்பும் அனைவருக்கும் உதவும் சேவை மனப்பான்மையுமே என்றால் மிகையாகாது. "பல்லின சமுகத்தினராலும் யுணிற்றா நாதன் அடையாளம் காணப்படுவதும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் உதவிக் கரங்களை நீட்டி எந்த நேரத்திலும் உதவும் பாங்குமே இவருடைய வெற்றிக்கு மூலகாரணம்" என மார்க்கம் வாழ் சமூக சேவகியுமான மீனா லகானி குறிப்பிட்டார்.
நான்கு ஆண்டு சேவைக் காலத்தினைக் கொண்ட இப்பதவி நவம்பர் 30, 2014ல் முடிவடையும். இப்பதவிக் காலத்தில் இதற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கல்வி சம்பந்தமான மாற்றங்கள், படிமுறைகள், கல்வித் தரம் போன்ற விடயங்களிலும் மற்றும் வெவ்வேறு சமுகத்தவர்களுக்கும் கல்விச் சபைக்கும் ஒரு பாலமாகவும் செயல்படுபவர்கள்.
இந்தத் தருணத்தில் கனடா தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் அவர்களுக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்தையும் 'திருத்தமிழ்' தெரிவித்துக்கொள்கிறது.