உண்மைகளைக் கண்டறிதலும் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறுவதும் இல்லாமல் இன முரண்பாடுகளால் பாதிப்படைந்த ஒரு நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என இவர் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.
கம்போடிய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் வன்னிப் போரின்போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிராக படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது. இந்த ஆவணப்படம் போர் இடம்பெற்ற பகுதிக்குள் தமிழ் மக்கள் எப்படி சிக்குண்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும், அவர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்ற துயரமான செய்தியையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி அவர்களை கிளிநொச்சியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணிக்கின்றது. ஆனால் அவர் களை வெளியேற வேண்டாம் என அங்கிருந்த தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இப்போரின்போது அடுத்து நடக்கப்போகும் சம்பவங்களுக்கான சர்வதேச சாட்சிகளை இல்லாமல் செய்யும் நோக்குடன் அரசாங்கத்தால் இவர்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இந்த ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கைத்தொலைபேசிகளால் போரில் ஈடுபட்டிருந்த படைத்தரப்பினராலும், போருக்குள் சிக்குண்டிருந்த தமிழ் மக்களாலும் படம்பிடிக்கப்பட்ட இக்காட்சிகள் படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு தகுந்த ஆதாரமாக அமைந்துள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை மற்றும் போர் வலயத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை போன்ற நடவடிக்கைகளையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை அந்த ஆவணப்படம் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆனால் நிபுணர்கள் குழுவின் அறிக்கையையும், இந்த ஆவணப் படத்தையும் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
அத்துடன் இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச நியமங்களைக் கொண்டிருக்கவில்லை. இதனால் இவை குறித்து சுயாதீனமானதும். காத்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்களகுழு பரிந்துரைத்துள்ளது.
2002ஆம் ஆண்டு போர் நிறுத்தக் காலப்பகுதியில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணைகள் எவ்வாறிருக்கும் என்பது அதன் பெறுபேறுகளிலிருந்தே கூற முடியும்.
ஆயினும் முன்னணி மனிதவுரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச்சபை, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான அமைப்பு ஆகியன உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத் தன்மை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளன. இலங்கையின் கொலைக்களம் எனும் இந்த ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது.
இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமாக சர்வதேச விசாரணைகளின் அவசியம் குறித்தும் சர்வதேச சமூகத்திற்கு இந்த ஆவணப்படம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருக்கிறார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையோ அல்லது மனிதவுரிமைகள் ஆணைக்குழுவோ இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என ரொரன்டோ ஸ்ரார் என்னும் ஊடகத்தில் ஆய்வாளரும், பேராசிரியருமான ஜெகதீசன் சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.காலிமுகத்திடலில் சீனாவின் ஆடம்பர கடல் நில ஹோட்டல்
கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காக 500 ஏக்கர் கடல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 700 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பெயர் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே சீனாவின் சிஏடிஐசி என்ற விமான உற்பத்தியாளர் நிறுவனம், காலிமுகத்திடலில் 10 ஏக்கர் காணிப்பரப்பில் ஆரம்பர ஹோட்டல் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்துடன் பல சீன நிறுவனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய இடங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.
இதேவேளை காலிமுகத்திடல் ஆடம்பர ஹோட்டலுக்கான காணி, 99 வருட குத்தகை அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.