24 .06 2011 த.ஆ-2042--வடக்கில் மட்டும் இந்த சிறப்பு கணக்கெடுப்பு ..வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள் உறவினர்கள்மூலம் குடிசனப் பதிவாளர்கள் வரும் போது பதிந்து கொள்வது தமிழினப் பாது காப்பிற்கு அவசியமாகும். இப்பொழுது கிழங்காக் கிழிக்காமல் பனையாகப் பிளக்கப் போவதாகக் கதை அளக்கக் கூடாது. எனவே தற்போது கருத்தாக இருந்து பதியலாம்.
யாழ். குடாநாட்டிலும் வன்னியிலும் இராணுவம் பதிவுகளை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, பாதுகாப்பு அமைச்சின் மூலம் தனியான குடிசன மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொள்ள உள்ள குடிசனக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு மேலதிகமாக வடக்கில் மட்டும் இந்த விசேட கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கென தெற்கில் இருந்து சிறப்பு அதிகாரிகள் குழுக்களும் வருகைதரவுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் குடிசன மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள்வதற்கான ஏற்பாட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் பணிப்புரைகளை யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனக்குக் கீழ் உள்ள அனைத்துப் பிரதேச செயலர் களுக்கும் அறிவித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களின் பின்னர் இம்முறை நாடு முழுவதும் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான முதற்கட்டப் பணிகள் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் குடிசன மதிப்பீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகளுக்கென 40க்கும் மேற்பட்ட வாகனங்களும் அதிகாரிகளும் தெற்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
பாடசாலை ஆசிரியர்களும் இந்தப் பணிகளில் ஈடுபடுத் தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரத் திணைக்களத்தினால் ஏற்கனவே மேற்கொள் ளப்பட்ட முதல்கட்டப் பணிகளின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் குடிசன மதிப்பீட்டில், வீட்டில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள், காணாமல்போனவர்கள்,அண்மையில் மரணம் அடைந்தவர்கள், வீட்டில் தங்கியிருக்கும் வெளியாள்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் பதிவுகள், கூட் டமைப்பின் நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்துக் கைவிடப் படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சின் கணக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வார ஆரம்பத்தில் யாழ். நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, இராணுவப் பதிவுகள் உடனடியாக நிறுத்தப்படும் எனவும் தேவையான விபரங்களை இராணுவம் இனி குடிசன மதிப்பீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார். எனினும் அந்த குடிசன மதிப்பீடு பாதுகாப்பு அமைச்சினால் தனியாக மேற்கொள்ளப்படும் என அவர் கூறவில்லை.