2014ஆம் ஆண்டு இதுவரை கண்டிராத வெப்ப அளவைக் கொண்டதாக அமையும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை. | படம்: ஏபி.
அதிவெப்பமய ஆண்டை நோக்கி பூமி சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வானிலை நிர்வாக அமைப்பு எச்சரித்துள்ளது.
1880-ஆம் ஆண்டு முதல் 7-வது அதிவெப்ப மாதமாக கடந்த நவம்பர் அமைந்துள்ளது.
உலக நிலப்பகுதி மற்றும் கடல் மேற்பரப்பு ஆகியவை இணைந்த சராசரி வெப்ப அளவு நவம்பர் மாதம் 2008-ஆம் ஆண்டுடன் சமநிலை எய்தியுள்ளது. அதாவது 20ஆம் நூற்றாண்டு சராசரியை விட 0.65 டிகிரி அதிகமாக நவம்பரில் பதிவாகியுள்ளது.
செப்டம்பர்-நவம்பர் மற்றும் கடந்த 11 மாத சராசரி வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. அதாவது முன்னெப்போதையும் விட இந்த 11 மாதங்களில் சராசரி வெப்ப நிலை அளவு அதிகமாகியுள்ளது.
20ஆம் நூற்றாண்டு சராசரியைக் காட்டிலும் நடப்பு டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 0.42 டிகிரி செல்சியஸ் அதிகமானால் போதும், 2014ஆம் ஆண்டு அதி வெப்ப ஆண்டாக பதிவாகிவிடும் என்று இந்த அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.
சராசரி வெப்பநிலை அதிகரித்தால் நிலநடுக்கங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.