09 .06. 2011-த.ஆ.2042-- விடுதலைப் புலிகளிடம் வன்னியில் பயிற்சி பெற்றதாக கூறி கடத்தப்பட்டு காணாமல் போன சிங்களப் புலிகளில் ஒருவர் நேற்று யாழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சிங்களப் புலிகளில் ஒருவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி மூவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனினும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரியந்த நிஹால் குணரட்ன எனும் பதுளையைச் சேர்ந்த சிங்களப் புலி ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் இவர் குற்ற ஒப்புதல் வாக்குமூல் ஒன்றினை அளித்தருந்தமையே சாட்சியாக சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டது. எனினும் சட்ட அமைவுகளுக்கு ஏற்ற வகையில் அவரது வாக்குமூலம் அமைந்திருக்கவில்லை எனக் கூறி யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து விட்டார்.
இதனையடுத்து நேற்றைய தினம் பிரியந்த நிஹால் குணரட்ன விடுவிக்கப்பட்டுள்ளார். விக்கிரமபாகு கருணாரட்னவின் இடதுசாரி சார்புடைய கட்சியின் ஆதரவாளர்களான இவர்கள் விடுதலைப்புலிகளிடம் வன்னியில் பயிற்சி பெற்றதாக கூறி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
நீண்ட இடைவெளியின் பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் காவற்துறை அறிவித்திருந்தது. அவர்களில் ஒருவரே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய இருவரும் அடுத்து வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என அரசியல் கைதிகளின் சார்பில் இலவசமாக ஆஜராகி வரும் மனித உரிமைகளுக்கான சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார். தான் நீண்ட காலமாக இவர்களுக்காக வாதாடி வந்திருந்ததாக தெரிவித்திருக்கும் அவர் இன்றைய தினமும் 08 தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் ஆஜராக்கப்படவுள்ளதாகவும் அவர்களில் நால்வர் விடுவிக்கப்படவுள்ளதாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தினம் வவுனியாவைச சேர்ந்த சதீஸ்வரன் எனப்படும் தமிழ் அரசியல் கைதியும் இதே குற்டறச்சாட்டின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் சாட்சியாக குறிப்பிட்டமையினால் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இவர்கள் மாறி மாறி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.