நியூயார்க்: அமெரிக்காவின் க்யூரியாசிட்டி விண்கலம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் கிரேட்டர் பகுதியில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகே விண்கல் ஒன்று மோதியதில் 96 மைல் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பள்ளம் உருவானதை கியூரியாசிட்டி படம் பிடித்து அனுப்பியுள்ளது. பூமியில் உயிர்கள் வாழ்வது போல் அங்கும் உயிர்கள் வாழமுடியும் என்பதற்கு ஆதாரமாக இதை பார்க்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் என்ற மலையிலிருந்து வரும் நீரானது கேல் பள்ளத்தாக்கின் மையப்பகுதிக்கு வந்து சேர்கிறது. அந்த மலை அடுக்கடுக்கான படிவப்பாறைகளால் அடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பது, கேல் பள்ளத்தாக்கை நாசாவின் இலக்காக நிர்ணயித்த விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது க்யூரியாசிட்டி விண்கலம் அந்த மலை மீது ஏறத் தொடங்கியுள்ளது. அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு அடுக்கும் அது உருவான நேரம் மற்றும் அப்போதிருந்த புவியியல் நிலைமைகளை அதனுள்ளே கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு அடுக்கும் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றின் ஒரு பக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் வெதுவெதுப்போடும், ஈரப்பதத்தோடும் இருந்த செவ்வாய் கிரகம் எவ்வாறு உலர்ந்து போனது என்பதைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.