01.12.2014-சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதற்கான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. குடியேறிகளின் நிகர எண்ணிக்கையை ஆண்டுக்கு 80 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக குறைப்பது வாக்கெடுப்பின் நோக்கமாக இருந்தது.
சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடங்கள், வீட்டுவசதி, பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் காணப்படும் அழுத்தத்தை இந்த கொள்கையின் மூலமாக குறைக்கும் என இதனைக் கொண்டுவந்தவர்கள் வாதிட்டிருந்தனர்.
மேலும், வேகமாக முன்னேற்றமடைந்துவரும் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை இந்த கொள்கை கடுமையாக பாதிக்கும் என அந்நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் கூறியுள்ளன.
இதுகுறித்து சுவிஸ் சோஷலிஸ ஜனநாயகக் கட்சி பிரமுகர் லதன் சுந்தரலிங்கம் கூறுகையில், வேலைத்திறன் தேவைப்படும் தொழில்களில் ஐரோப்பியத் தொழிலாளர்களை சுவிட்சர்லாந்து பெரிதும் நம்பியுள்ளது.
ஆனால் அந்நாட்டின் என்பது லட்சம் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.
வெளிநாட்டுக் குடியேறிகளின் எண்ணிக்கையில் கோட்டா நடைமுறையை மீளக் கொண்டுவருவதற்காக கடந்த பிப்ரவரியில் நடந்த வாக்கெடுப்பு சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கான உடன்படிக்கையை சுவிட்சர்லாந்து நடைமுறைப்படுத்தாத நிலைமை உருவானது.
இதனிடையே, சுவிட்சர்லாந்து மத்திய வங்கியின் தங்கக் கையிருப்புகளை பெருக்கிக்கொள்வதற்கு வற்புறுத்தும் திட்டம் ஒன்றுக்கும் பெரும் செல்வந்தர்களான வெளிநாட்டவர்களுக்கு வரிச்சலுகைகளை அளிப்பதை தடுக்கும் பரிந்துரைக்கும் வாக்கெடுப்பு நடந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது