எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்று மனோகணேசன் தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக்கள் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண குடிமக்கள் என்று இலங்கையின் காவல்துறை அறிவித்துள்ள நிலையில், எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவருகின்ற எதிர்கட்சிகள் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து அச்சமடைந்துள்ளார்கள். இதுதொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளமையானது இலங்கை அரசின் சட்டவிரோத செயல்கள் ஆகும். எதிர்வரும் தேர்தலினை முன்னிட்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இதுஅமைகின்றது. இதேவேளை இலங்கை அரசாங்கத்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அல்லாதவர்கள், மதகுருமார்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஆனால் எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு நீக்கப்படப்டமையானது இலங்கை அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அமைகின்றது. இதில் குறிப்பாக நீதிமன்றமும் ஜக்கிய நாடுகள் செயலாளரும் இலங்கை அரசிற்கு உரியஅறிவுறத்தல்களை வழங்கியுள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய கொடுங்கோலர்கள் இன்னமும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்படவில்லை. கடத்தல்களும் காணாமல் போதல்களுக்கும் காரணமாக சட்டவிரோத சக்திகளை பன்நாடுகளுக்கு அம்பலப்படுத்தியிருந்த காரணத்தினால் எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அனைத்து ஆபத்துக்களுக்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்றும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.