இரான் ஒரு இராணுவ சர்வாதிகார நாடாக மாறிவருகிறது எனத் தான் நம்புவதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் அம்மையார் கூறியுள்ளார். அரசாங்க அதிகாரங்களை இரானின் புரட்சிப் படை அத்துமீறி கைப்பற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்புரட்சிப் படையை இலக்குவைத்து இரான் மீது சர்வதேச தண்டனைத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.
சவுதிஅரேபியா வந்துள்ள அவர் மன்னர் அப்துல்லாவை சந்திக்கவிருக்கிறார். இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்க சவுதியின் ஆதரவை கிளிண்டன் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரான் மீது கடுமையான தடைகளை விதிப்பதற்கு சீனாவின் சம்மதத்தை பெற சவுதிஅரேபிபியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்புணர்த்தியுள்ளனர்.