ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி மக்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டன இயக்கம் ஒன்று பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வன்செயலுக்கு எதிரான இயக்கம் என்று பெயர் கொண்ட இந்த இயக்கம், ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய உணவகங்களில் ஆஸ்திரேலிய மக்கள் சென்று உணவருந்துவதை ஊக்குவிப்பது இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது.
மெல்பர்ண் நகரில் ஒரு சாதாரண கணினி இணைய பக்கமாக ஆரம்பித்து ஆதரவு அளிக்க விரும்புவோர் கைச்சாத்திடுங்கள் என்று கேட்டு, கணினி வலையத்தில், சமூக நட்பு இணைய தளங்கள் மூலம் இந்த இயக்கம் வேகமாக பரவியுள்ளது.
இந்தியாவிலிருந்து செல்லும் மக்கள் மீது, குறிப்பாக மாணவர்கள் மீது சிட்ணி, மெல்பர்ண் நகரங்களில் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு தோன்றியுள்ளது.