இமயமலை சிகரங்களில் பனிமுகடுகள்பருவநிலை மாற்றம் காரணமாக, இமயமலையின் பனிமுகடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஐநாமன்றத்தின் காலநிலைமாற்றத்திற்கான உயர்மட்டக்குழு கூறியதில் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஐநா மன்றத்தின் குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இமயமலையின் பனிமுகடுகள் காணாமல்போகும் என்ற அறிக்கையை 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஐநா குழுவின் துணைத்தலைவர் ஜீன் பஸ்கல் வான் யபர்செலெ அவர்கள், இதில் நிகழ்ந்த தவறுக்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
அதாவது இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முந்தையை மறு தணிக்கை நடைமுறைகளில் தவறு நடந்திருக்கலாம் அல்லது இந்த அறிக்கையை தட்டச்சு செய்தபோது இந்த தவறு நடந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இமாலய பனிமுகடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் கரைந்து காணாமல் போகக்கூடும் என்கிற எதிர்வுகூறலுக்கு பின்னணியில் முறையான அறிவியல் கணக்கீடுகள் இருந்தனவா என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருந்த பின்னணியில் இவருடைய இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.