நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹைட்டியின் பாதுகாப்பு பணிகளுக்காகவும், அங்கு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை பாதுகாப்பதற்காகவும் கூடுதலாக 3500 படையினரை அனுப்புவதற்கு ஐநா மன்றத்தின் பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ஹைட்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் உணவு மற்றும் குடிநீர் ஆகிய அத்தியாவசிய பொருட்களை ஆகாயத்திலிருந்தபடி பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வீசுவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். அப்படி செய்தால் அங்கே பெருங்கலவரங்கள் மூளலாம் என்ற அச்சங்களும் நிலவுகின்றன.
முன்னதாக, தலைநகர் போர்தோபிரான்ஸுக்கு அருகில் பாதுகாப்பான இடம் ஒன்றில் உணவுப்பொட்டலங்களும் குடிநீர் போத்தல்களும் ஆகாயத்தில் இருந்தபடி வீசப்பட்டன. காரணம் இத்தகைய நிவாரணப்பொருட்களை சாலை வழியாக கொண்டு செல்வதில் பெரும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கின்றன.
அமெரிக்காவின் இழுவை படகில் இருந்து, நிவாரணப் பொருட்கள் சரக்குக்கப்பலுக்கு ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை ஹைட்டியின் முக்கிய துறைமுகம் வழியாக அனுப்பப்படும் முதலாவது நிவாரண பொருட்களாக இருக்கும்.
நிலநடுக்கத்தில் இந்த துறைமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் பெரிய கடற்கலங்கள் எவையும் இங்கே இதுவரை நிலைகொள்ள அனுமதிக்கப்படவில்லை.