பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்கும் காளைகளுக்கு மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் கொடுக்கப்படுவதாகவும், அந்த விலங்குகள் பல வகைகளில் துன்புறுத்தப்படுவதாகவும், அத்துடன் அந்தப் போட்டிகளில் பலர் உயிரிழப்பதாகவும் தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து, அந்தப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதிகாரிகள் அந்தப் போட்டிகளை நடத்துவதைக் கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், மிகவும் கட்டுப்பாடான முறையிலேயே இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
மதுரை அருகே, அலங்காநல்லூரில் துவங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மத்திய அமைச்சர் அழகிரி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்தப் போ்ட்டிகளைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் கூடுவது வழக்கம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாடுகளுக்கும், மாடுகளை அடக்கக் களம் இறங்கும் வீரர்களுக்கும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்ட பி்ன்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அங்கு மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளின்போது, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தார்கள்.
வெள்ளிகிழமை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்தார். 46க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.