14.06.2013-கச்சத்தீவை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் வி.நாராயண சாமி கூறினார்.
திருநின்றவூர் யெயா பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரங்கள்:
கேள்வி: தமிழக-இலங்கை எல்லையில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது?
பதில்: இது தொடர்பாக இலங்கை அரசிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் தமிழக-இலங்கை எல்லையில் இந்திய இராணுவக் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடும். தற்போது தமிழக மீனவர்கள் 10 பேர், ஆந்திர மீனவர்கள் 35 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கே: கட்சத்தீவை மீட்பது குறித்து தமிழக முதல்வர் இயற்றியுள்ள தீர்மானம் குறித்து?
பதில்: கட்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா, இலங்கைக்கு இடையேயான ஒப்பந்தம் மீறப்படாமல் கட்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கே: இலங்கை அதிகாரிகளுக்கு தமிழகத்தில் இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து..?
பதில்: இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு வியாபாரங்களை செய்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்தும் மத்திய அரசு கவலைப்பட வேண்டியுள்ளது. அதேபோல், இலங்கைத் தமிழர்கள் இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கி வருகிறது.
இவை ஏதும் தெரியாமல் மத்திய அரசை மட்டும் குறை கூறி வருகின்றனர். கடந்த முறை இதே போல் பிரச்னை எழுந்த போது, 18 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதே போல் இந்த 2 பேரும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர் என்றார் அவர்.