அங்கோலாவில் பாதுகாப்புக்கு இடையே கால்பந்தாட்டப் பந்தயம் நடக்கிறது கடந்த வெள்ளிக்கிழமையன்று டோகோ நாட்டு கால்பந்து அணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கோலாவின் அரச கட்டுபாட்டு வானொலி தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த கபிண்டாப் பகுதியில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
இதனிடையே அங்கோலாவில் நடைபெற்றுவரும் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக டோகோ நாட்டு அணி விடுத்த வேண்டுகோளை ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் மூன்று நாள் தேசிய துக்கத்தில் பங்கு பெறுவதற்காக, டோகோ நாட்டு அரசின் உத்தரவுக்கமைய அந்நாட்டு அணி நாடு திரும்பியுள்ளது.
தமது நாட்டின் அணியின் மீது மறைந்திருந்தவர்கள் நடத்திய தாக்குதல் ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டுக்கே ஏற்பட்ட ஒரு வெட்கக்கேடான செயல் என்று டோகோவின் பிரதமர் வர்ணித்துள்ளார்.
தங்களது நாட்டு அணியின் பாதுகாப்பை அங்கோலா அரசு உறுதிசெய்யத் தவறிவிட்டது என்று கூறி அந்நாட்டை டோகோவின் பிரதமர் விமர்சித்துள்ளார்.
தாக்குதலை நியாயப்படுத்த டோகோ கிளர்ச்சிக் குழு தலைவர் முயற்சி
இதனிடையே நாடு கடந்த நிலையில் பிரான்ஸில் வாழ்ந்து வரும் அங்கோலாவின் ஒரு கிளர்ச்சிக் குழுவின் தலைவர், டோகோ நாட்டு அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அங்கோலாவில் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஃபிளெக் எனப்படும் கபிண்டா பிரிவினைவாதக் குழுவினருக்காக பேசவல்லவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் ரோட்ரிக்ஸ் மின்காஸ், கபிண்டாப் பகுதியில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து, ஏற்கனவே ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது எனக் கூறுகிறார்.
இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், இது வன்முறையை தூண்டும் ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம், எனினும் இந்தக் கருத்துக்கள் புறந்தள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.