ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நேற்று மாலை 7 மணியளவில் யாழ்பாடி ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
அந்த மாநாட்டில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவிகருணா நாயக்க,அனுரகுமார திஸநாயக்க, அர்ஜீண ரணதுங்க, அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சரத்பொன்சேகா மேலும் விவரித்தவை வருமாறு:
இன்று எமது நாட்டுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. யுத்தம் முடிவடைந்துவிட்டது. எனவே உயர்பாதுகாப்பு வலயஙகள் தேவையில்லை. யுத்தம் முடிவடைந்தவுடனேயே அவை அகற்றப்பட்டிருக்கவேண்டும். எனினும் இதுவரை அது நடைபெறவில்லை. அது ஏன் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதும் முதலில் முகமாலை, தனங்கிளப்பு, அரியாலை, யாழ்.நகர், பலாலி, நாகர் கோயில் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும். பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச்சட்டம் இனிமேல் தேவையற்றது. அது உடனடியாக நீக்கப்படும் அத்துடன் காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களில் சிறையில் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படும். முன்னர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டோரினதும் இப்போது முகாமில் வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களினதும் விவரங்கள் இதில் அடங்கும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடு விப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் காணாமற்போனோரில் உயிருடன் இல்லாதவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீளக்குடியமர்த்தல் தேர்தல் நாடகம்
இப்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படாமல் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இது ஒரு தேர்தல் நாடகம். மீளக்குடியேற்றப்பட்ட இடங்களில் கள்ள வாக்குகளைப் போடுவதற்கும் அங்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மீளக்குடி யேற்றத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச நிவாரண நிதியை "ராஜபக்ஷ கம்பனி'' களவாடிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நான் நன்கு அறிந்தவன். இங்கு நான் இராணுவ தளபதியாக பணியாற்றியவன். எனவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தகுதி என்னிடம் உள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலருக்கு இது தொடர்பாக போதிய அறிவு இல்லை. அவர் 20 வருடங்களின் பின்னர் ஒரு வெளிநாட்டுத்தூதுவர் போல இங்கு வந்துள்ளார்.
நான் ஆட்சிக்கு வந்தால் இங்கு இராணுவ ஆட்சி நடைபெறும் என்று கூறப் படுகிறது. நான் இராணுவ ஆட்சியை விரும் பியிருந்தால் இப்போதுள்ள அரச தலைமையை எப்போதோ சிறையில் அடைத்து ஆட்சிக்கு வந்திருப்பேன். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இந்த நாடு அனைத்துப் பிரஜைகளுக்கும் சொந்தம். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகள் என நான் கூறியதாக முன்னர் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தி முற்றிலும் தவறானது. நான் அதனை முற்றாக மறுக்கின்றேன். சிங்கள மக்கள் அனைத்து இனங்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதையே நான் கூறினேன். அது திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. இந்த நாடு தனியே சிங்களவருக்கோ, தமிழருக்கோ சொந்தமானதல்ல. அது இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் உரியது என்றார்.
நன்றி.. வன்னி இணையம்..