குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும்…மறவன்புலவு க. சச்சிதானந்தன்-நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்-செல்வன்

29.02.தி.ஆ2044-19.03. கி.ஆ 2013-ஒருவரை ஒருவர் விரும்பும் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரம். தலைவியைத் தலைவன் தொடுவான்.

தலைவி கழுத்தை வளைப்பாள், தலை குனிவாள், முகம் சிவப்பாள், கொடுப்புக்குள் சிரிப்பாள், உடல் நெளிவாள், கால் விரல்களால் நிலத்தில் கோடிடுவாள், மேனி சிலிர்ப்பாள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வாள்.

 

கண்களின் கடைக்கோடிக்கு விழிகள் போவதும் வருவதுமாய்… அடுத்துத் தலைவன் என் செய்வானோ என்ற ஏக்கம் ஒருபுறம்.. ஏதும் செய்யாமலிருக்கும் தலைவனின் தேக்கத்தால் வரும் ஏக்கம் மறுபுறம்..

 

இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குத் தமிழில் ஒரே சொல் நாணம்…. தலைவியின் நாணம்.

 

இறியூனியன் தீவில் பரத நாட்டியப் பள்ளி. கலாச்சேத்திராவில் பயின்ற ஆசிரியை சொல்லிக் கொடுக்கிறார். நாணத்துக்குரிய அடவுகளைக் கூறுகிறார். பிரஞ்சு மொழியில் விளக்குகிறார். பதம் பிடித்துக் காட்டுகிறார்.

 

மாணவிகளுள் ஒருத்தி. 18 வயதுப் பெண். தமிழ் மொழி தெரியாத தமிழ்ப் பெண். பிரஞ்சு மொழியில் கேட்கிறாள். நாணம் என்றால் என்ன? பிரஞ்சு மொழியிலோ ஆங்கில மொழியிலோ அதற்கான சொல்லை ஆசிரியையால் கூற முடியவில்லை. தலைவன் தொட்டால் ஏன் நாண வேண்டும்? இது அடுத்த வினா.

 

அந்த மாணவி மட்டுமன்று, அங்கிருந்த மாணவிகளுள் பெரும்பாலோரின் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் அவை.

 

250 ஆண்டு காலமாகத் தமிழர் இறியூனியனில் வாழ்கின்றனர். பிரஞ்சுக்காரர், ஆபிரிக்கர், கலப்பினத்தார் நடுவே இன்றைய (2013) மதிப்பீட்டில் ஐந்து இலட்சம் தமிழர்.

 

தமிழ் மரபுகளை மழுங்கடிப்பதையே தலைமுறைகள் பலவூடாக ஊக்குவிக்கும் பிரஞ்சு மேலாதிக்கச் சூழல்.  வெங்கானத்தில் காணற்கரிய நீரூற்றையும் சுற்றிய நிழல்தரு மரங்களையும் போல, அங்கங்கே தமிழ் ஆர்வலர்கள், கோயில்கள், ஊடகங்கள், நூல்கள், சைவ சமயச் சடங்குகள், இசை நாட்டியப் பள்ளிகள், தமிழ் வகுப்புகள். இவையே தமிழ் மரபுகளுக்கு நங்கூரங்கள்.

 

நாணம் என்ற தமிழ் மரபின் பொருளை அறியாமலே பேதையாகிப் பெதும்பையாகி நங்கையாவோர்.

 

இறியூனியனுக்கு மட்டுமன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர், அங்கங்கே பெற்று வளர்க்கும் தமிழ்த் தலைமுறைக் கொடுப்பனவுகள் இவை.

 

30 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர் ஆத்திரேலியாவில் பெற்றெடுக்கும் தமிழ்க் குழந்தைகள் விதிவிலக்காவாரா? அவர்களுள் பெரும்பாலோர் கொண்ட கோலம் அதுவே. ஆனாலும் விதிவிலக்காக வாழ்கிறோம் என்கின்றனர் மெல்போணில் வாழும் வாசன் இல்லத்தவர்.

 

வாசனும் மங்களமும் பெற்றெடுத்த மக்கள்,  18 வயதான இலட்சணியா, 14 வயதான வசீசர்.

 

மயிலாப்பூரின் கிழக்கு மாட வீதியில், பாரதப் பண்பாட்டுப் பேழை போற்றும் பாரதீய வித்தியா பவன அரங்கில், 2013 மார்கழி இசை விழாவிற்குப் பங்களிப்பாக, 06. 01. 2013 அன்று சென்னையின் விற்பன்னர் நடுவே, தெரிந்து சுவைக்கும் சுவைஞர் குழாம் சூழ இலட்சணியாவும் வசீசும்  ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி.

 

அலாரிப்பில் கணேச  கவுத்துவம். சிறீகாந்தரின் செழுமைக் குரலில் கஜானனம். எடுத்த எடுப்பிலேயே வசீசரின் கால் அடிகளின் கட்டுக்கோப்பும் இலட்சணியாவின் முக பாவங்களும் மேடையைக் கொள்ளைகொண்டன. இருவரா? மேடையில் ஒருவரா? அதே பதங்களை ஒரே நேரத்தில் இருவரும் இரு பாவைகளாக, பதம் பிடித்தனரே, இம்மியும் பிறழாது ஒத்திசைந்து நடனமாடினரே.

 

அடியார் மேல் பரிவு கொண்டார்.  காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்தார். நம்மை ஆட்கொண்டவர். மௌவலும் மாதவியும் புன்னையும் வேங்கையும் செருந்தியும் செண்பகமும் குருந்தும் முல்லையும் வளரும் சோலை சூழ்ந்த திருக்கோணமலை இறைவன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன் பாடிய தேவாரப் பாடல். மூன்றாம் திருமுறை 123ஆம் பதிகம் 6ஆவது பாடல். பரிந்து நன் மனத்தால் எனத் தொடங்கும் அப்பாடல் வரிகளுக்குப் பதம் பிடித்தனர் இலட்சணியாவும் வசீசரும். இருவரின் தாய்வழிப் பாட்டனார் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தார். எனவே இலங்கையர்கோன் வழிபட்ட ஈசருக்கு அஞ்சலி!

 

 

 

அடுத்துத் தோடி இராகம், ஆதி தாளம், ஆதிசிவனைக் காணவே  எனத் தொடங்கும் பாடல். தண்டாயுதபாணிப்பிள்ளை ஈந்த பாடல் வர்ணமாக. ஒன்பான் சுவைகள், ஒன்பதுக்கும் முக பாவங்கள் முன்னெடுத்த பதங்கள். நரேந்திராவின் சொற்கட்டுகளுக்கு நடனமணிகள் இருவர் ஈந்த அசைவுகள். ஒருவர் அசைந்த வழி ஒத்திசைந்த மற்றவரின் அசைவு. குழலிசைத்தார் அதுல் குமார். மத்தளம் ஒலித்தார் அரிபாபு. கலையரசன் இராமநாதன் வயலின் இசைத்தார். இலட்சணியா முக பாவங்களில் மிளிர்ந்தார், வசீசர் காலடிக் கட்டமைப்பு முதலாகக் கழுத்தசைவு வரையாக இயைந்து அசைந்து பரந்து ஒளிர்ந்தார்.

 

இருவரும் ஒரே நேரத்தில் மேடையிலாயின் மேடை பொலியுமா? அல்ல அல்ல, ஒவ்வொருவரும் தனித் தனியே திறமையாளர். அவரவர் பாணி அவரவருக்கு. இருவரையும் தனித தனியாகப் பார்க்கலாமா என்ற குரு நரேந்திரனாரின் ஆவலுக்கு விடை தந்தனர் வசீசரும் இலட்சணியாவும்.

 

கருணைரஞ்சனி இராகத்தில், கண்ட தாளத்தில் அம்புசம் கிருட்டினா இசையில், திருமால் பூவுலகிற்குக் குருவாயூரப்பனாக வந்து அருளுவதை வியக்கும் அடியாராக, ஓம் நமோ நாராயணா எனத் தொடங்கும் பாடலுக்குத் தனியாகவே வந்து நடனமாடி அசத்தினார் இலட்சணியா.

 

 

 

செஞ்சுருட்டி இராகத்தில் ஆதி தாளத்தில் காவடிச் சிந்துக்கு ஆடி அசத்தினார் வசீசர். பழனி மலையையும் காவடி ஆட்டத்தையும் மெல்போணில் இருந்தவாறே கண்டவரோ கேட்டவரோ வசீசர்? காவடிக்காக அவர் தோள்கள் வளைந்த அழகும் கால்கள் வைத்த அடி ஒழுங்கும் வியப்பில் என்னை ஆழ்த்தின.

 

அடுத்துக் காம்போதி இராகம், ஆதி தாளம், குழலூதி மனமெல்லாம் எனத் தொடங்கும் பாடல். ஊத்துக்காடு வேங்கட சுப்பிரமணியனாரின் பாடல். மயிலே வசீசரைப் பார்த்துப் போலச்செய்யுமோ என்ற மயிலாட்டம் இடையில் வந்தபோது என் கைகள் தாமே சேர்ந்தன, தட்டின. உள்ளமோ ஆர்ப்பரித்தது.

 

 

 

நாட்டிய இணையர் தனஞ்செயனும் சாந்தா தனஞ்செயனும் கற்பித்து ஆளாக்கிய நரேந்திராவின் மாணாக்கர் இலட்சணியாவும் வசீசரும் மேடையில் ஆடுந்தொறும் நரேந்திராவின் முகத்தில் பூரிப்பு. தன் முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்தனரே இருவரும் என்ற மன நிறைவு.

 

சிறப்பு விருந்தினரான சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டி மகிழ்ந்தார்.

 

திருமந்திரப் பாடலான அன்பு சிவம் இரண்டென்பர் எனத் தொடங்கும் பாடலுக்கும் அதையொத்த இரு பாடல்களுக்கும் இலட்சணியாவும் வசீசரும் ஆடி மகிழ்வித்தனர்.

 

பிருந்தாவன சாசங்க இராகத்  தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்திய பின்னரும், பாட்டியார் பாலம் இலட்சுமணனின் இராமகிருட்டிண மிசன் சார்ந்த மங்களப் பாடலை நினைவூட்டிச் சுவாமி அரங்கானந்தாவின் பாடலுக்கு நடனமாடி மங்களம் சேர்த்தனர் இருவரும்.

 

கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா? மயிலாப்பூரில் பரத நாட்டிய மரபுகளைக் காட்டிப் பிழைக்கலாமா?

 

 

 

அருள்மிகு கபாலீச்சரர் கோயிலின் மாட வீதியில் தொடங்கி தெற்கே திருவான்மியூர் வரை, மேற்கே மாம்பலம் வரை, வடக்கே திருவல்லிக்கேணி வரை படைப்பாற்றலின் மேதைகள், இசையில் நுண்மா  நுழைபுலத்தார், நடனத்தின் துல்லிய மரபுகளைத் துலக்குவோர் குவிந்து வாழ்கின்றனர் . அவர்களின் ஆற்றல், திறன், புலமை யாவுக்குமான அரங்குகள் தெருவுக்குத் தெருவாய், சந்து பொந்தெங்கும் விரவியுள.

 

மெல்போணில் பிறந்து, வெள்ளையர் நடுவே வளர்ந்து, ஆங்கில மொழி மூலம் கற்று, தமிழ்க் கலைகளோ, விளையாட்டுகளோ, பண்பாட்டுக் கூறுகளோ இல்லாத வெங்கானத்தில் நீரூற்றான பரத நாட்டியப் பள்ளி ஒன்றில் பயின்ற இருவர், மயிலாப்பூரின் பாரதீய வித்தியா பவன அரங்கில் நாணத்துக்கு இலக்கணம் வகுத்தனராயின், மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும் கற்பித்தனராயின் அந்த நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிகொண்டு என் உள்ளம் சிலிர்த்ததை, யான் பெற்ற இன்பத்தை என் தமிழில் பகிரவேண்டாமா?

 

 

 

என் தமிழ் எழுத்தை ஊக்குவித்தவர் இலட்சுமண ஐயர். என் தொண்டை ஊக்குவிப்பவர் அவரின் அருமைத் துணைவியார் பாலம் இலட்சுமணன். இருவரும் ஈந்த இளைய மகள் பெருமாட்டி மங்களம். அவர் கணவர் திருவுடையார் சீனிவாசன். இருவரும் இடையறாது உழைத்தனர்.  தம்மக்கள் இலட்சணியாவையும் வசீசைரையும் பரத நாட்டிய விற்பன்னராக்கினர். ஆத்திரேலியாவில் தமிழ் மரபு பேணுகின்றனர். அவர்களின் முயற்சிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.

 

நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்

 

-செல்வன்

 

பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. ஏன் எனில் காட்டுமிராண்டி சமூகங்களில் இந்த வியாதிகள் இல்லை. தினம் பல் துலக்காத காட்டுமிராண்டி சமூகங்களில் ரூட்கனால் சர்ஜரி தேவைப்படுவது இல்லை. தினமும் மூன்று வேளை பல் துலக்கி, ஃப்ளாஸ் செய்து சுத்தமாக பல்லை வைத்து இருக்கும் நகர்ப்புற சமூகங்களில் தான் டென்டிஸ்டுகள் தேவைப்படுகின்றனர்.

 

1913ல் ஆப்பிரிக்காவில் மருத்துவ சேவைப்பணி ஆற்ற சென்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் அங்கே மேற்கு ஆபிரிக்காவில் வசித்த பழங்குடி மக்களை சந்தித்தார். 41 வருடங்கள் அங்கே மருத்துவராக பணி ஆற்றினார். 41 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு மலேரியா, வயிற்றுகடுப்பு மாதிரி வியாதிகளுக்கு சிகிச்சை அளித்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார். ஆனால் 41ஆண்டுகளில் அவர் சந்தித்த அப்பென்டிக்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஒன்று. கான்சர் வந்த பழங்குடி மக்களையும் அவர் சந்திக்கவில்லை. தொப்பை, தொந்தி, சர்க்கரை, கொலஸ்டிரால் இவை எதுவும் அந்த மக்களுக்கு இருக்கவில்லை.

 

ஆனால் 41 ஆண்டுகளில் மேலைய நாகரிகமும், மேற்கத்திய உணவுமுறையும் ஆப்பிரிக்கர்களிடையே பரவின. ரொட்டிகள், மாவுகள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவை நாகரிகமாயின. ஸ்வைட்சரின் இறுதி ஆண்டுகளிலில் ஆப்பிரிக்கர்களிடையே கான்சரும், சர்க்கரை, கொலஸ்டிரால் வியாதிகளும் பரவலாயின.

 

இதுபோல தென்னாப்பிரிக்காவில் 19ம் நூற்ராண்டில் இன ஒதுக்கல் கடுமையாக நிலவியது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. இந்தியர், பூர்வகுடி ஸூலூக்கள், வெள்ளையர் என மூன்று விதமான இன ஒதுக்கல் அங்கே இருந்தது. அங்கே டயபடிக் க்ளினிக் நடத்தி வந்த ஜார்ஜ் கேம்பெல் எனும் மருத்துவர் இரு விதமான நோயாளிகளை மட்டும் கண்டார். வெள்ளையர்களுக்கு டயபடீஸ், அப்பென்டிக்ஸ், ரத்த அழுத்தம் முதலிய நாகரிக வியாதிகள் அனைத்தும் இருந்தன. ஸூலுக்களுக்கு அம்மாதிரி வியாதிகள் இல்லை. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவரிடம் வந்த சர்க்கரை நோயாளிகளில் 80% பேர் இந்தியர்கள் (தமிழர்கள்). இதே மருத்துவர் பின்னாளில் பிலடெல்பியா சென்றபோது அங்கே இருந்த கருப்பினத்தவருக்கு வெள்ளையருக்கு சமமாக நாகரிக மனிதனின் வியாதிகள் இருந்ததை கண்டார். ஸூலுக்களுக்கும் அவர்களுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருந்ததை அறிந்தார்.

 

ஆனால் இன்று உடல் இளைக்கவும், டயபடீஸ், கொலஸ்டிரால் கட்டுபாட்டுக்கும் மக்களுக்கு கொடுக்கபடும் அறிவுரைகள் எது? நாகரிக மனிதனின் உணவுகளை உண்பதுதான். உதா; ரொட்டி, சப்பாத்தி, இட்டிலி முதலியவை. இவற்றில் கொலஸ்டிரால் அல்லது கொழுப்பு சுத்தமாக இல்லை. கொலஸ்டிராலோ, கொழுப்போ இல்லாத உணவை உண்ண சொல்லி மக்களுக்கு பரிந்துரைக்கபடுகிறது. மக்களும் 2% கொழுப்புள்ள பால், ஸ்கிம் மில்க், சோயா பால் முதலியவற்றை உண்கின்றனர். சிகப்பு மாமிசத்தை தவிர்த்து பழங்கள், வெள்ளை மாமிசம் எனப்படும் சிக்கன், சாலட் என உண்கின்றனர். இதனால் வியாதிகள் குறைகிறதா? உணவில் உள்ள கொழுப்புக்கும் உடலில் உள்ள கொலஸ்டிராலுக்கும் எதாவது தொடர்பு உண்டா?

 

கொலஸ்டிராலுக்கு காரணம் கொழுப்பு நிரம்பிய உனவுகளை உண்பது என நாம் எப்படி அறிந்தோம் என்பதே சுவார்சியமான விஷயம். இதை கண்டுபிடித்தவர் ஆன்சல் கீஸ் எனும் ஆய்வாளர். அவர் சுமார் 22 நாடுகளில் மக்களின் உணவையும் அவர்கள் கொல்ஸ்டிரால் அளவையும் ஆராய்ந்தார். அதன்பின் அதில் ஏழு நாடுகளின் டேட்டாவை மட்டும் எடுத்து பதிப்பிட்டார். அதில் மக்களின் உணவில் கொழுப்பு அதிகம் இருக்க அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் அதிகமாக இருப்பது கன்டுபிடிக்க பட்டது.

 

60களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆய்வுக்காக ஆன்சல் கீஸ் டைம் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கபட்டார். அதன்பின்னர் கோடிகணகான டாலர்கள் கொலஸ்டிராலுக்கும் நம் உணவில் உள்ல கொழுப்புக்கும் இருக்கும் ஒற்றுமையை ஆராய செலவிடபட்டன. பின்னளில் வெளியான ஆய்வுகள் தெளிவான எந்த முடிவையும் தரவில்லை. ஆனால் அதற்குள் ஆன்சல் கீஸின் ஆய்வு முடிவை ஒட்டி பலரும் கொழுப்பு குறைந்த உணவுகலை உண்ண துவங்கினர்.

 

இந்த பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அரசு செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜார்ஜ் மெக்கவர்ன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கமிட்டி கொலச்டிராலுக்கு காரணம் கொழுபப என ஆராய்ந்தது. கமிட்டி முன் அறிக்கை சமர்ப்பித்த விஞ்ஞானிகளிடம் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவின. ஆனால் ஜார்ஜ் மெக்கவர்ன் இதற்கு முன் நேதன் ப்ரிக்ட்கிர்ன் எனும் மருத்துவர் நடத்திய கொழுப்பு குறைவான உணவுகளை உண்ணும் புரக்ராமில் கலந்து கொண்டவர். இந்த புரக்ராமில் கலந்துகொன்டவர்கள் எடை குறைந்தது உண்மை. ஆனால் கொழுப்பு குறைந்த உணவுகலை உன்ட பலரும் பின்னாளில் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துகொண்டதால் நேதன் அந்த புரக்ராமையே பின்னாளில் கைவிட்டு விட்டார்.

 

இப்படி இந்த புரக்ராமில் கலந்துகொண்டதால் மெக்கவர்ன் கொழுப்பு குறைவான உணவுகள் தான் நல்லவை என நம்பிவந்தார். கமிட்டி அறிக்கை வெளியாகி “உடலில் கொலச்டிராலை குறைக்க கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பதே வழி” என பரிந்துரைக்கபட்டது. உடனே அதை ஒட்டி அமெரிக்க அரசின் புட் பிரமிட் வெளியிடபட்டது. அதில் ரொட்டி, சீரியல் முதலிய தானிய உணவுகளை அதிகம் உண்ன மக்களுக்கு பரிந்துரைக்கபட்டது. மாமிசம், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக உண்ன அல்லது தவிர்க்க பரிந்துரைக்கபட்டது.

 

இந்த பரிந்துரைகளை ஒட்டி மில்லியன்கனகான டாலர்கள் சீரியல், ரொட்டி கம்பனிகளால் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. “இதயத்துக்கு நன்மை அளிக்கும் சீரியல்கள்” என்ற முத்திரையுடன் அவை வலம் வந்தன.

 

ஆனால் இது அனைத்துக்கும் அடிப்படையான மருத்துவர் ஆன்சல் கிஈஸின் ஆய்வு பல நாட்கள் மறுபரிசீலனைக்கு உடபடவே இல்லை. அவற்றை பின்னாளில் ஆராய்ந்தவர்கள் ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துகொன்டதை விடுத்து அந்த 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் பதிப்பிட்டிருந்தால் நாம் உண்ணும் உணவில் உள்ல கொழுப்புக்கும், நம் உடலில் உள்ல கொலஸ்டிரால் அளவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்தார்கள்.

 

கீழே இருக்கும் கிராபில் இடப்பக்கம் இருப்பது 7 நாடுகளின் டேட்டா. வலப்பக்கம் இருப்பது 22 நாடுகளின் டேட்டா.

 

 

 

ஆன்சல் கீஸின் ஆய்வில் கொழுப்பு என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டதை விடுத்து புராசஸ் செய்யப்பட்ட செயற்கை கொழுப்புக்கும் (உதாரணமாக ஹைட்ரஜனேட்டெட் ஆயில்கள்- மாரடைப்பு அதிகமாக இருந்த நாடுகளில் இவை அதிகம் பயன்பட்டன), மாரடைப்புக்கும் உள்ள உறவை கணக்கிட்டிருந்தால் அவர் டேட்டாவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கும் என பின்னாளில் ஆய்வாளர்கள் கூறினார்கள். (உதா: கரோலின் பாரிங்கர்)

 

துரதிர்ச்டவசமாக கொழுப்பு மோசம் என ஒட்டுமொத்தமாக கொழுப்புக்களை குறைக்க சொன்னதால் மக்கள் இயற்கை கொழுப்புக்களான நெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு ஆகியவற்ரில் சமைப்பதை நிறுத்தி செயற்கை கொழுப்புக்களான மார்கரின், ஹைட்ரஜனேட்டட் வெஜிட்டபிள் ஆயில் (சோயா, சன்பிளவர், கார்ன் ஆயில்) ஆகியவற்ருக்கு மாறினார்கள். இவற்றில் இருந்த டிரான்ஸ்ஃபேட் மிக ஆபத்தானது, மாரடைப்பை ஏற்படுத்துவது என்பது பின்னாளில் தெரியவருவதற்குள் இவை “இதயத்துக்கு நலமளிப்பவை” என்ற முத்திரையுடன் பெரும் சந்தையை பிடித்து விட்டிருந்தன.

 

 

 

ஆலன் கீஸ் ஆய்வை தொடர்ந்து உணவில் உள்ள கொழுப்புக்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும் இடையே உள்ள உறவு ஆராயபட்டது. ஆய்வு முடிவுகள் தெளிவான எந்த ரிசல்ட்டையும் தரவில்லை.

 

உதாரணமாக அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆய்வை எடுத்துகொள்வோம். ஆய்வின் முழு பிடிஎப் சுட்டியும் இங்கே காணலாம்

 

229 பேரிடையே நடத்தபட்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். கண்ட்ரோல் க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினருக்கு உணவு கட்டுபாடு எதுவும் விதிக்கப்டவில்லை. கரோனரி க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினர் குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்டார்கள். இறுதியாக கணக்கிட்டதில் கன்ட்ரோல் க்ரூப் கரோனரி க்ரூப்பை விட 12% அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் நிரம்பிய உணவுகளை உண்டதாக கணக்கிடபட்டது.

 

அதன்பின் இந்த இரு பிரிவினரின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளக்கபட்டது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் குறைந்த கொழுப்புக்களை உண்ட கரோனரி க்ரூப்பின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளவு கண்ட்ரோல் க்ரூப்பின் கொல்ஸ்டிரால் அளவை விட 16% அதிகம் இருப்பதாக் தெரிய வந்தது.

 

ஆக 12% அளவு குறைந்த கொழுப்பை உண்ட பிரிவினர் 16% அளவுக்கு ரத்தத்தில் கொல்ஸ்டிராலை அதிகரித்து கொன்டனர்.

 

இதய அடைப்பு உள்ளவர்களுக்கு குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பரிந்துரைப்பதன் நன்மைகளை நிருபிக்க நடந்த இந்த ஆய்வு தலைகீழான ரிசல்டுகளை அளித்ததால் வெறுத்துபோன விஞ்ஞானிகள் “இதய அடைப்பு உள்ளவர்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும் என பரிந்துரைப்பதில் எந்த நன்மையும் இல்லை” என கூறி எழுப்பி ஆய்வை முடித்தார்கள்

 

அடுத்த வாரம் இதே தலைப்பில் நடந்த வேறு சில ஆராய்ச்சி முடிவுகளை காண்போம்