இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில்தான் பெரும்பாலான மழையை பெறுவது உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில்தான் பெரும்மழை பெறுகிறது. தென்மேற்கு பருவமழைக்காலத்தில் குறைந்த மழைதான் கிடைக்கும்.
கடந்த வருடம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களில் பொய்த்துவிட்டது. அணைகள்பகுதியிலும், அணைகளுக்கு தண்ணீர் வரக்கூடிய பகுதிகளிலும் மழைபோதிய அளவுக்கு பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மத்திய பகுதிகளில் அதாவது திருச்சி, நாகை, கடலூர், விழுப்புரம் முதலிய மாவட்டங்களில் கடந்த வாரம் மழைபெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சற்று திருப்தி அடைந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழைபெய்யும். விவசாய வேலைகளை தொடங்கலாம் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
எப்போது தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும்? என்று சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மய்ய அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியையொட்டி தொடங்கும். 20 ஆம் தேதிக்கு சற்று முன்னதாகவும் தொடங்கலாம் சற்று பின்னாலும் தொடங்கலாம். தென்மேற்கு பருவமழை முடிந்த மறுநாள், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சொல்லலாம். எப்படியும் சராசரியாக பார்த்தால் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களாக வெயில் அடித்து வருகிறது. அதுவும் நெல்லை போன்ற இடங்களில் வெயில் அதிக காட்டத்துடன் கோடை போல அடிக்கிறது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை அதிகாரி கூறியதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு மேகங்கள் திரளும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.