பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கை, இந்தியாவின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோபன்ஹேகன் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.
கோபன்ஹேகன் மாநாட்டுக்கு முன்னதாக, இந்திய அரசு தான் அளித்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதாவது, கார்பன் வெளியீட்டு அளவை வெளியில் தெரிவிப்பது தொடர்பான தனது உறுதிமொழியில் இருந்து மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டார். சர்வதேச ஆலோசனை மற்றும் ஆய்வுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருப்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
ஆனாலும், அது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்காது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.