இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சரணடைய முனைந்த அந்த அமைப்பின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விளக்கம் கோரியுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதியின் அலுவலகம், அது தொடர்பில் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை மேற்கோள் காட்டி முதல் முறையாக இந்தக் குற்றசாட்டுகளை இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஞாயிறன்று செய்தி வெளியிட்டுருந்தது.
ஆனால் தான் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தவறாக புரிந்தது கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த செய்தி வெளியான பிறகு ஜெனரல் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இதேவேளை, விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல் ஒன்று வெளிநாடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டு இலங்கை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.