ஈரான் - ஈராக் இடையே கடந்த 1980-1988ஆம் ஆண்டுகளில் நடந்த போர் நினைவு நாள் நேற்று ஈரானில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஈரான் தலைநகர் டெஹ்ரானில், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பை நடத்தினர்.
இதில் நூற்றுக்கணக்கான இராணுவ பீரங்கிகளும், ஏவுகணைகளும் இடம்பெற்றன.
அப்போது தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி முகமது அகமது நிஜாத் கூறுகையில், ஈரான்- ஈராக் இடையே போர் நடந்த போது நமது வீரர்கள் காட்டிய அதே வீர உணர்வுடன், நம்பிக்கையுடன் உலக சக்திகளிடம் இருந்து தற்போது எழுந்துள்ள அச்சுறுத்தல்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
ஈரான் விடயத்தில் அத்து மீறி நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈரான் இராணுவ தளபதி அதோல்லா செலேகி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், ஈரானிடம் வாலாட்டினால் இஸ்ரேலை இல்லாமல் செய்து விடுவோம். எங்களது பலத்தை காட்டும் வகையில் அணி வகுப்பு நடந்தது. யாரையும் மிரட்டும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றார்.