தஞ்சையை சேர்ந்த மேற்படி இளைஞன், பாகிசுதானின் உளவாளியாக செயல்பட்டு வருவதாகவும், இந்திய இராணுவ ரகசியங்களை பணத்திற்காக விற்க இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விளைஞன் இலங்கைக்கு வரவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய இறுவட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவ்விளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தென்னிந்தியாவில் உள்ள முக்கிய இராணுவ பயிற்சி மையங்கள், அணுமின் நிலையங்கள், கடற்படை தளங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை படம் பிடித்து அவற்றை இலங்கையில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்பின் பொறுப்பாளர் பாஸ் என்கிற அமீர் மூலமாக பாகிசுதானுக்கு அனுப்பி வந்துள்ளது தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து அவ்விளைஞனின் கடவுச்சீட்டு, வீடியோ புகைப்படங்கள், பென்டிரைவ் ஆகியவற்றையும் கா.து கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், மேற்படி நடவடிக்கையில் தொடர்புடைய சந்தேகநபரிடம் விசாரணை நடத்துவதற்காக கியூ பிரிவு கா.துறையினர் இலங்கை வர திட்டமிட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. (நக்கீரன்)