சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு கலவரத்தில் இதுவரை 18,000 பேர் இறந்துள்ளதாக ஐ.நா சபை குற்றம் சுமத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்யி லாவ்ரோவ்வை சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியாப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பிறகு செர்யி லாவ்ரோவ் கூறுகையில், ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி, அடுத்த நாட்டுப் பிரச்னையில் தலையிட கூடாது.
பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
ஒரு நாடு மக்களுக்கு எதிராக குண்டுகளால் தாக்குதல் நடத்தினால் அதை தடுக்க ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் உள்ளது. அதை விட்டு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வர நினைக்கும் போக்கை கைவிட வேண்டும்.
சிரியாவின் உள்நாட்டு பிரச்னையில் அந்நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தீர்வுக்கு வர அந்நாட்டின் துணை பிரதமர் கத்ரியமிளுடன் பேசியுள்ளேன்.
உள்நாட்டுப் பிரச்னையான இதில் வெளிநாட்டு தலையீடு ஒரு இடையூறாக இருக்கும் என்று அப்போது சிரியாப் பிரதமர் என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார்.
ரச்யாவும், சீனாவும் சிரியாவுக்கு ஆதராவாக பேசி வரும் நிலையில் அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.