குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கருணாநிதி, மத்திய அரசின் மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை! டெசோ பற்றி கனிமொழி

09.08.2012-இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு. கேள்வி:  உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! 'டெசோ’ அமைப்பு நடத்தும் மாநாடு கருணாநிதியின் அரசியல் கணக்குதானே?

பதில்:   இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு.

ராயீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை என்கிற வார்த்தையைச் சொல்லக்கூடப் பயந்து ஒளிஞ்சவங்க இப்போ தலைவர் கலைஞரை நோக்கி விரல் நீட்டிப் பேசுறாங்க.

இலங்கைத் தமிழர்கள் குறித்துப் பேசுவதற்கான களமும் தளமும் திரும்ப அமைந்தது தி.மு.க. ஆட்சியில்தான். தலைவர் கலைஞர் எது செய்தாலும் குற்றம் சாட்டுபவர்கள், 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழ் ஈழத்தை உருவாக்கிக் காட்டுவேன்’ என வாக்குறுதி கொடுத்தவர்களை ஏன் மறந்துட்டாங்க?

போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’னு மனசாட்சியே இல்லாமப் பேசினவங்களைக் கேள்வி கேட்க ஏன் ஆளே இல்லை? எல்லாப் பிரச்னைகளுக்கும் தலைவரை மட்டும் விமர்சிப்பவர்கள் கிட்ட, இப்போ ஆட்சியில் இருப்பது தலைவர் கலைஞர் இல்லைனு யாராவது எடுத்துச் சொன்னா நல்லா இருக்கும்.

கேள்வி:  ஆனால், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தி.மு.க. இன்றைக்குக் காட்டும் அக்கறையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோதே காட்டி இருக்கலாமே?

பதில்:  ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. என்னங்க செய்யலை? போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கும் தலைவர் எவ்வளவு பாடுபட்டார்னு அந்த முயற்சிகளைப் பாழாக்கினவங்களுக்கு நல்லாத் தெரியும்.

தி.மு.க. மட்டுமே அத்தனை விமர்சனங்களுக்கும் பதில் சொல்லுதுங்கிற ஒரே காரணத்துக்காக, குறை கூறுவதை மட்டுமே முழு நேர வேலையா சிலர் வெச்சிருக்காங்க. இன்னைக்கு யார் வேணும்னாலும், 'பிரபாகரன் என்கிட்ட அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்’னு கற்பனைகளைப் பரப்பலாம். அதை எல்லாம் ஏன் அவங்க அன்னைக்கே சொல்லலை?

போர் முடிந்த பிறகு, அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மூலமாகத்தான் அங்கு இருக்கும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச நன்மையைக்கூடச் செய்ய முடியும். அந்த நோக்கத்தில் அவர்களைச் சந்திக்கப்போனால்... அதற்கும் அடுக்கடுக்காக விமர்சனங்கள்.

ஒருவேளை எங்களை மட்டுமே விமர்சிக்கிறவங்களுக்கு யெலலிதாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவோ என்னவோ? இன்னைக்கும் இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்பட்டுட்டுத்தானே இருக்காங்க.

அவங்களுக்கு நல்ல வாழ்க்கைக்கான உத்தரவாதம் அளிக்க யெயலலிதா என்ன செஞ்சாங்க? குறைந்தபட்சம் இதைப் பற்றி மத்திய அரசிடம் பேசக்கூட இல்லை. எந்தச் சூழலிலும் எதற்காகவும் யெயலலிதாவை விமர்சித்துவிடக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் தலைவர் கலைஞரை விமர்சிக்கிறாங்க.

காரணம், கலைஞரை விமர்சிச்சா, பதில் வரும்... அம்மையாரை விமர்சிச்சா, வழக்கு வரும். இலங்கைத் தமிழர்களின் துயரங் களை யார் அரசியலாக்கினாலும் அது அநாகரிகம். இங்கே இருக்கிற தமிழர்களைக் கைதட்ட வெச்சாலோ, உசுப்பேத்தினாலோ அங்கே இருக்கிற தமிழர்களுக்கு எந்த நல்லதும் நடக்காது!

கேள்வி:  டெசோ அமைப்பு மாநாட்டில் தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தப்போவது இல்லை என கருணாநிதி அறிவித்ததற்கு மத்திய அரசின் மிரட்டல் தான் காரணம் என்று சொல்கிறார்களே?

பதில்:  தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டுட்டதா கலைஞர் எப்பவுமே சொல்லலை. இலங்கைத் தமிழர்களுக்கான இப்போதைய தேவை... அடிப்படைஉரிமைகளும் வாழ்வாதாரங்களும். அதுக்கு ஒரு தீர்வு கிடைச்ச பிறகே, தனி ஈழக் கோரிக்கை சாத்தியம்.

எதை எப்போ வலியுறுத்தணும்னு கலைஞருக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்சு 'டெசோ’ மாநாடு குறித்து காங்கிரசு தலைவர்கள் யாருமே தி.மு.க- கிட்ட பேசலை. மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை.

'டெசோ மாநாடு பற்றி பேசிய கனிமொழி விகடனுக்கு வழங்கிய  பேட்டியில் இருந்து முக்கிய பகுதிகள்!

 

ராயபக்சவைக்கூட நம்புவோம்! ஆனால் கருணாநிதியை நம்ப மாட்டோம்! சீறும் ஈழத் தமிழன்

 

காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?சேசுராஜ், முன்னாள் போராளி.

 

ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக் கிடந்தேன்.

 

அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.

 

அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம்.

 

அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

 

நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு.

 

ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!

 

ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

 

நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்தகைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு.

 

இப்போது உள்ள நிலையில் அவர்களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக்குக் கொண்டுசெல்ல முடியும். இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

 

சொந்த விருப்பு வெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது.

 

ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளார்கள்.

 

ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.

 

சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பை புலிகள் தோற்றுக் கொண்டிருந்த போது அவர்கள் மேல் காட்டினார்.

 

ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப்பான்.

 

ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டது’ என அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''

 

யோ.கர்ணன், இறுதிப் போரில் பங்கெடுத்த போராளி

 

தமிழகத் தேர்தல் அரசியல் இழுபறிக்குள் எமது இரத்தத்தை விற்பனைப் பொருளாக்கி விடாதீர்கள்’ என்பதே எமது வேண்டுகோள். 'தயவுசெய்து எங்களை விட்டிடுங்கடா’ என ஈழத் தமிழர்கள் கை கூப்பிக் கதறி அழுதாலும், இந்த விற்பனையாளர்கள் விடமாட்டார்கள் போல் உள்ளதே.

 

கருணாநிதியையும் ஒரு மீட்பராக ஈழத் தமிழர்கள் துதித்த காலம் ஒன்று இருந்ததுதான். நாங்கள் வேர்கள் அறுபட்டு அகதியாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில், பற்றுவதற்கு ஒரு சிறு துரும்பாவது கிட்டாதா என இந்தப் பூமிப் பந்தின் திசைகள் எல்லாம் கைகளை அளைந்து அந்தரித்துக்கொண்டு இருந்த நாட்களில் அவர் எங்கள் கண்களில் தென்பட்டார்தான்.

 

மனிதச் சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட அவரது செயற்பாடுகள்தான் அந்த நாட்களில் பெரும்பாலானவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. யுத்த வளையத்தில் அதிகமும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகவும் அவரது பெயர் இருந்தது. ஆனால், நாங்கள் வருந்தியழைத்த அந்தப் பொழுதுகளில் எல்லாம் அவர் வரவே இல்லை.

 

இப்போது மீண்டும் வந்திருக்கிறார், எல்லாம் முடிந்த பின், நாங்கள் அழைக்காமலேயே. இதைப் பார்த்து நாம் அழுவதா, இல்லை சிரிப்பதா, இல்லை சிரித்துக்கொண்டே அழுவதா?

 

கருணாநிதிக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஈழத்தில் மகிந்த ராஜபக்சவை நம்புவதற்குத் தயாராக உள்ள தமிழர்கள்கூட கருணாநிதியை நம்புவதற்குத் தயாராக இல்லை!''

 

சயந்தன், ஈழ எழுத்தாளர்:

 

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள்.

 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த்தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்டவர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.

 

ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க்கப்படுவதால், அவரவர் வசதிப்படி நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோ’வும் ஒன்று.

 

சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

 

காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது

 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.