குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் தரப்பும், பாஜக தரப்பும் முஸ்தீபுகளை முடுக்கி விட்டுள்ளன. மேலும் பிற அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை பட்டை தீட்டி வருகின்றன. தற்போதைய நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் முன்னணி பரிசீலனையில் உள்ளது. பல கட்சிகளும் அவருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனால் காங்கிரஸ் தரப்பில் அதற்குப் பெரும் தயக்கம் காட்டப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், திமுகவின் ஆதரவை உறுதி செய்து கொள்வதற்காகவும், வேட்பாளர் குறித்து விவாதிக்கவும் ஒரு தூதரை அனுப்ப காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதன்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் சோனியா காந்தி. இன்னும் ஓரிரு நாளில் சென்னைக்கு வரும் அந்தோணி, சோனியாவின் தகவலை கருணாநிதியிடம் தெரிவிக்கவுள்ளார். அவர் கூறும் பதிலை சோனியாவிடம் தெரிவிப்பார்.
இந்தத் தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக கருணாநிதியை சந்திக்க பிரணாப் முகர்ஜி அல்லது குலாம் நபி ஆசாத் போன்றோரைத்தான் சோனியா அனுப்புவார். இதுவரை அந்தோணியை எதற்குமே அவர் அனுப்பியதில்லை. ஆனால் இந்த முறை அந்தோணி வருவதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் பிரணாப் முகர்ஜியும் வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இன்னும் இருப்பதால்தான் அவரை சோனியா காந்தி அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பு துணைக் குடியரசத் தலைவர் ஹமீத் அன்சாரியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக யோசித்து வைத்துள்ளது. அதற்கு லாலு பிரசாத் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.