இஸ்லாமாபாத்: அல் குவைதா இயக்கத் தலைவராக இருந்த பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நாளை நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல் குவைதா இயக்கத் தலைவர் பின்லேடனை 11 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. அதன் பிறகு ஒசாமாவின் 3 மனைவிகளும் அவர்களது குழந்தைகளும் பாகிஸ்தான் அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டு ஒசமா மனைவிகள் மற்றும் குழந்தைகள் மீது போடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் எவ்வளவு விரைவாக அவர்களை நாடு கடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக கடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடந்து ஒசாமா குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரையும் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நேற்று இரவு தீவிர ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் ஒசாமா குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
ஒசாமா பின்லேடனின் மனைவிகளில் இருவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் யேமனைச் சேர்ந்தவர். அனேகமாக அனைவருமே சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படக் கூடும் என்று தெரிகிறது. யேமனைச் சேர்ந்த ஒசாமாவின் மனைவி மட்டும் சவூதி அரேபியாவிலிருந்து யேமனுக்கு அவரது 5 குழந்தைகளுடன் மீண்டும் நாடு கடத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.