கேரளத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள்- தமிழகம் திரும்பினர்.
15 .16.12.2011 நெடுங்கண்டம் பகுதியில் காரித்தோடு, கரியன்மலை பகுதியில் வசித்து வந்த 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்
கேரள அரசு பெரியார் அணை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து விட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த மலையாளிகள் இடுக்கி பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களை தாக்கி துரத்தியடித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கேரள அரசை எதிர்த்து ஊர்வலமாக சென்றனர்.இதனால் அதிருப்தியும், கோபமும் அடைந்த கேரள மாநிலத்தினர், அப் பகுதியில் வசிக்கும் தமிழர்களைக் கடுமையாகத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.மேலும், தமிழர்களுக்குப் பணி வழங்கவும் பல கேரள எஸ்டேட் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். தங்கள் எஸ்டேட்டுகளிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பலர், தமிழகப் பகுதிகளுக்குள் தப்பி வந்துள்ளனர்.
நெடுங்கண்டம் பகுதியில் காரித்தோடு, கரியன்மலை பகுதியில் வசித்து வந்த 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக குதிரைப் பாதை, சாக்குலத்து மெட்டு, ராமக்கல் மெட்டு மலைப் பாதைகள் வழியாக தப்பி சங்கராபுரம், கோணாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு உறவினர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.இவர்களில் பலர் மாணவர்கள். கேரளத்தில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.இந்த மாணவர்கள் நெடுங்கண்டம் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். விரட்டியடிக்கப்பட்டதால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.மேலும், தமிழர்களுக்கு மருத்துவ வசதியோ, உணவுப் பொருள்களோ கேரளத்தவர்கள் வழங்க மறுப்பதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கும் மறுக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, உடும்பஞ்சோலை பகுதியில் உள்ள கஞ்சிகலையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் (மொத்தம் 11 பேர்) போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தஞ்சமடைந்தனர்.
தமிழகத்தில் தாக்குதல் தொடர்கிறது.
..........................................................
இந்நிலையில் கோவை, தஞ்சை, மதுரை, தேனி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மலையாளிகளுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தஞ்சையில் முத்தூட் நிறுவனத்தின் நிதி நிறுவனத்தை சிலர் மூடச் சொன்னனர் அவர்கள் போலீசார் பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்று கடையைத் திறந்தனர். சிறிது நேரத்தில் அந்தக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. அது போல கோவை உள்ளிட்ட பல் வேறு இடங்களில் கடைகள் நொறுக்கப்பட்டன.