இதில் கனிமொழி, சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி மற்றும் 5 தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் உள்பட 12 பேர் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
ராசா, தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளான சித்தார்த் பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மட்டுமே சிறையில் உள்ளனர். இதில் சந்தோலியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதை டெல்லி உயர் நீதிமன்றம் இதில் தானாகவே தலையிட்டு ஜாமீனை நிறுத்தி வைத்தது. ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த ஜாமீன் உறுதி செய்யப்படுமா என்பது நாளை டெல்லி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்தது.
இந்த வழக்கில் கைதான 14 பேரில் இதுவரை ஜாமீன் மனுவே தாக்கல் செய்யாதது ராசா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால், பாதுகாப்புக்காகத் தான் அவர் ஜாமீனே கோரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை அவரது வழக்கறிஞர் சுகில்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானும் கூட இந்தக் கதைகளைக் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தச் செய்திகளில் உண்மையில்லை, அது வெறும் புரளி தான்.
அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து அடுத்து ராசா மனு தாக்கல் செய்வார்.
ராசா, பெகுரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வெவ்வேறானவை. என்றாலும் அவரது ஜாமீன் மனு மீது என்ன தீர்ப்பு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதுவரை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு ராசாவுக்கு எந்த யோசனையும் நான் தர மாட்டேன் என்றார்.
அமெரிக்கப் படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க பாக். ராணுவத்திற்கு தளபதி கயானி உத்தரவு
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.
நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.