குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

எலும்பு தேய்மானம் தடுக்க எளிய வழி! இயற்கை மருத்துவக் குறிப்புகள்காது கேளாமைக்கு நவீன சிகிச்சை!.குடல்

உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எலும்புகளின் அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

வயது 30அய்த் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. 

வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம் வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.

எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து, விட்டு  விடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்

இயற்கை மருத்துவக் குறிப்புகள்
 
வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

முழு நெல்லிக்காய் 4, பச்சைமிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும். வில்வமரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும். வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

வங்காரவள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும். வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

வ முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.


.காது கேளாமைக்கு நவீன சிகிச்சை!
 

காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ரவி ராமலிங்கம் கூறியிருப்பதாவது: பொதுவாக ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து, செவிப்பறையில் விழுந்து, நடுக்காதுக்குள் செல்லும். அங்கு மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காதுக்குச் செல்லும். காக்ளியா' என்ற இடத்தில் அது எலக்ட்ரிக்கல் சிக்னலாக மாறி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும்.

மூளையில் காதுக்கான பிரத்யேகப் பகுதியில், அந்த சிக்னல் உணரப்படும். இதில் பிரச்சினை இருந்தால், காது கேளாமை ஏற்படும்.இந்த பிரச்சினைக்கு தீர்வாக வந்தது தான், காக்ளியர் இம்பிளான்ட்.' இதில் உட்பகுதி, வெளிப்பகுதிகளைக் கொண்டது.

வெளிப்பகுதியில் தான் ஒலியை அனுப்பும் அமைப்பு, பேட்டரி போன்றவை உள்ளன. இவை தான் வெளியில் உள்ள சப்தத்தைப் பெற்று, அதை டிஜிட்டல் சிக்னலாக மாற்றி, உட்பகுதிக்கு அனுப்பி, கேட்கும் திறனை செயல்படுத்துகிறது.சமீபத்தில் மிக மெல்லிய, காக்ளியர் இம்பிளான்ட்' அறிமுகமாகி உள்ளது. இதில் அகற்றக் கூடிய வகையில் காந்தம் உள்ளது. இதனால், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழல் வந்தால், காந்தத்தை அகற்றிக் கொள்ள முடியும்.

காது கேளாமை சிகிச்சைக்கு வரும்போது, எதனால், கேட்கவில்லை என்று பல சோதனைகள், ஸ்கேன் எடுத்துப் பார்த்த பிறகே, இம்பிளான்ட்' பொருத்துவது பற்றி முடிவு செய்வோம். சில குழந்தைகளுக்கு காது மண்டல அமைப்பே சரியாக இருக்காது. அவர்களுக்கு இந்த, இம்பிளான்ட்' பொருத்த முடியாது.

இதில் இன்னுமொரு நற்செய்தியும் உள்ளது. உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியை காதுக்குப் பின்புறம் தோலுக்கு அடியிலேயே வைத்துப் பொருத்தும்படி, புதிய, இம்பிளான்ட்' விரைவில் வர உள்ளது.

இது, நடைமுறைக்கு வந்துவிட்டால், பிறவிக் காது கேளாமை பிரச்சினை உள்ள குழந்தைகளும் நம்மைப் போலவே கேட்கும் திறனுடன் இருப்பர்!

- இதற்கான நவீன சிகிச்சைகளை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் வழங்கப்படுகிறது.

.குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி?
 

உடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாகி பலர் தங்கள் உடலை பெருக்க வைக்கிறார்கள். உடல் உழைப்பு, உடற்பயிற்சி பழக்கம் பலருக்கு இருப்பதில்லை.இதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

இதை கண்டு கொள்ளமல் விடும்போது, மலச்சிக்கலில் ஆரம்பித்து பல நோய்களை கொண்டு வந்து விடுகிறது. அதிக எடை, குடல் இறக்கம் ஏற்படவும் முக்கிய காரணமாகிறது. குடல் இறக்கத்துக்கான அறிகுறிகளை உணர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் சரிசெய்து கொள்ள முடியும்.

தடுக்கும் முறை: குடல் இறக்கம் பிரச்சினை வராமல் இருக்க முதலில் செய்ய வேண்டியது உடல் எடையைக் குறைப்பது தான். அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு உடல் எடை யைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.

மாமிச உணவுகளுக்கு குட்பை சொல்லி விடுவது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நோயை விரட்ட முடியும். இருமல் மற்றும் தும்மலுக்கு முறையான சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.

குடல் இறக்கப் பிரச்சினையை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அடி வயிற்றில் அல்லது தொப்புள் பகுதியில் லேசான அழுத்தத்துடன் கூடிய வலி இருக்கும். திடீரென வீக்கம் ஏற்படும், அடுத்த நாள் அல்லது படுத்தால் வீக்கம் காணாமல் போய்விடும். வயிற்றுப் பகுதியில் மந்தமான வலி தொடர்ந்து தொல்லை தரும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுக வேண்டும். அப்போது உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றம் மற்றும் எளிய பயிற்சிகள் போதுமானதாக இருக்கும். பிரச்சினை முற்றிய பின்னர் மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். குடல் இறக்கப் பிரச்சினை வந்த பின்னர் வீக்கம் உள்ள இடத்தில் அழுத்தம் இருக்கும்படி பட்டையான பெல்ட் அணிய வேண்டும்.

கீழே உள்ள பொருட்களை நேரடியாக குனியாமல் உட்கார்ந்தபடி எடுக்க வேண்டும். ஸ்கிப்பிங் மற்றும் வெயிட் லிப்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் செய்யக் கூடாது. அதிக வெயிட் உள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். வந்த பின்னர் நொந்து கொள்வதை விட குடல் இறக்கம் பிரச்சினை வராமல் காக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.