குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

திருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி? - ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்

நா.சிபிச்சக்கரவர்த்தி...02.01.தி.ஆ 2055....16.01.கி.ஆ  2024 திருக்குறள் தமிழர்களின் அடையாளங்களில் முதன்மையானது. மதத்தையோ, சமயத்தையோ தழுவிய வார்த்தைகள் திருக்குறளில் எங்கும் தென்பட்டதில்லை. அதனால்தான் அதை மத, தேச வேறுபாடுகளின்றி எல்லோரும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.

 

இந்தச் சூழலில், சிலர் திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசிவருகிறார்கள். திருவள்ளுவர் என்றதுமே நீண்ட தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள். அதன்பின், அந்த ஓவியம் 1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது. இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது.

துணை சனாதிபதி யாகீர் உசேன்.

வேணுகோபால் சர்மா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பல நூறு முறை முயன்று வள்ளுவருக்கு உருவம் கொடுத்தார். அப்படம் உருப்பெற்றதற்கான காரணங்களையும் நுட்பமாக எழுதி வைத்தார். சென்னைப் பல்கலைகழகம், அதை 2012-ம் ஆண்டு நூலாகப் பதிப்பித்து விழாவெடுத்து வெளியிட்டிருக்கிறது. திருவள்ளுவரின் உருவத்துக்கான அடிப்படை விஷயங்களை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் எடுத்திருக்கிறார் என்பதும் அந்நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவள்ளுவரின் ஒவ்வொரு பாகத்திற்கும், ஏன் அப்படி வரையப்பட்டது என ஓவியர் ஆர்.கே.வேணுகோபால் சர்மா எழுதியது, அவர் வார்த்தையில் அப்படியே உங்களுக்காக.

``இத்தகு விளக்கங்கண்ட திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக்கூடும் சிறிதே முன் வழித்துப் பின்வளர்த்த பெருங்குடுமியா? நாகரிக ஒப்பனையுடன் வெட்டப் பட்ட சிகையா? இவையனைத்தும் தனித்தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகி விட்டமையின், திருவள்ளுரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும் நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது. ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும் உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.

திருவள்ளுவர்

அதிகாரபூர்வ திருவள்ளுவர் படம்

அதே முறைப்படி நாசி, ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன் பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால் புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும் ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல் நோக்கி அகன்றிருக்க வேண்டும்.

அண்ணாவுடன் வேணுகோபால்

அப்படி இருந்தால் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உண்டாகிறது என்பதால் திருவள்ளுவரின் நாசி அதற்கொப்ப அமைக்கப்பட்டது. வாய் அகன்றிருக்கக் கூடாது; குறுகியும் இருக்கக் கூடாது; மெல்லியதாய் இருத்தலும் கூடாது. அப்படி இருந்தால் வாய்மைத்திறன் வாய்க்காது. ஆகையால், தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள் அமைக்கப்பட்டன. உலகின் மீதுள்ள பெருங் கருணையால்தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால் ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி, பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன. சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக்குறிகள், மதச்சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின.

மு.வரதராசனார்

அவரது நீண்டகன்ற காதுகள் பல ஆண்டுகாலமாக அவர் பெற்ற கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்த செவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன. உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்றும், மருந்தே தேவையில்லை என்றும், குறைவாக உண்பவனிடத்து இன்பம் போல் நிறைவாக உண்பவனிடத்துத் துன்பமிருக்கும் என்பது போன்ற நல்வழிகளைக் கூறிய திருவள்ளுவர், தானும் அவற்றைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு நேர்ந்திருக்காது. அக்காரணத்தால், உடல் தன் ஊட்டத்தினின்றும் இளைத்திருக்காது என்பதாலும், திருவள்ளுவர் உட்பகையை வென்ற பேராண்மை மிக்கவர் என்பதாலும் அவரது திருமேனி நல்ல ரத்தத்துடனும், கட்டுக்கோப்புடனும் பண்பட்டிருத்தலை அமைத்துக் காட்ட தூண்டுதலாயிற்று. உலகப் பற்று, சமயப் பற்று இவற்றிலிருந்து திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதேனெனில், ஏதாவது மதத்தையோ, சமயத்தையோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்லை. அப்படியிருந்தால் மத, தேச வேறுபாடுகளின்றி, எல்லோரும் அதைத் தத்தம் மொழியில் மொழி பெயர்த்து வருவதும் நிகழாது. மேலும் அந்நாள்களில் வாழ்ந்திருக்கக் கூடிய மத, சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டினையும் கண்டனங்களையும் எழுப்பத் தவறியிருக்காது என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மனிதன் உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால், திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லாமல் ஆயின.

ஈ.வி.கே.சம்பத்

வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் வலிய ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.

ஆர்.கே.வேணுகோபால் சர்மா

மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோம வரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு, தூய்மை பெற்ற உடல், தூய்மையான குறிக்கோள். இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது. வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துள்ள அழுத்தம், மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஊக்கத்தையும் நெஞ்சுறுதியையும் காட்டுவதாகும்.

பாவேந்தர் பாரதிதாசன்

கலை நலம் நிரம்பப் பெற்று காண்போரின் அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது. வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்திருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த என்றால் நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க. அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும் பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக்கொண்டேயிருக்கும். சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கும் ஒப்ப அமைக்கப்பட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து, அப்பாலும் பல அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு, சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவாக வரையப்பட்டுள்ளன.

கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாததற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம்பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது. அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர் தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தாணியை ஊன்றி விட்டால், குறள் முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப் பெயறும். இந்நிலையில் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்ந்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலையில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது.திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும். ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால், அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் - இருபக்கங்கள் - இவற்றில் மரம், செடி, கொடிகளோடு - வீடு வாசலோ எவற்றையும் அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி நிற்கும் அறிவுச்சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.

கண்ணதாசன்

அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் ஒளிவட்டம் ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்கு போய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிம் உள்ள மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம், வள்ளுவரின் ஒளி மற்றையோர் போல வட்டமாகத் தனக்கு மட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப் பாய்கிறதைக் காட்டுகிறது. மண் தரையில் மரப் பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும், உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அறநெறியை வகுத்துத் தந்த தனிப்பெருந்தகையான அவர்தம் தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்கு தீண்ட இடந்தருவது இழுக்காகுமெனக் கருதியதாகும்.

தோழர் யீவா

நம் நாட்டின் ஒப்பற்ற அறிவுச் செல்வமாகிய பெருந்தகை திருவள்ளுவரின் ஒளி வடிவம் இந்த ஓவியன் உள்ளத்தில் கொண்ட வகையிலேயே நீர்க் கலவை வண்ணக் குழம்பு கலந்து தீட்டிய இந்த வடிவிலும் நிலைபெற்று அமைவதாகும். வாழ்க வள்ளுவரின் அறிவுப்பேரொளி" என்று எழுதி வைத்திருக்கிறார் ஆர்.கே.வேணுகோபால் சர்மா.

அன்று வாழ்ந்த அறிஞர் பெருமக்களாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அரசியல் லாபத்திற்காக இந்த வரலாற்றை மறைத்து திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுவது, அவர் பெருமைக்கு களங்கம்  ஏற்படுத்தும் செயலாகும். நன்றி விகடன்.