இலங்கையிலிருந்து சுவிற்சர்லாந்துக்குத் தத்தெடுக்கப்பட்ட 900 குழந்தைகளின் தத்துப் பரிமாற்றங்களில் நடந்திருக்கக் கூடிய முறைகேடுகள் குறித்த விடயங்கள் கேள்விக்குள்ளாகத் தொடங்கியுள்ளன. நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலிருந்து எழுந்த கேள்விகள், சுவிற்சர்லாந்தில் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து கவனம் பெறத் தொடங்கியுள்ள இந்த விடயம், சுவிற்சர்லாந்தில் யூத மக்களின் நிதிவளம் கையகப்படுத்தப்பட்டதற்குப் பின்னதான பெரும் மனிதவள மோசடி என்ற வகையில் விமர்சிக்கப்படுகிறது. இப்போது இது தொடர்பான விசாரணைகளை அரசு மேற்கொள்ளும் என அறிவித்திருக்கிறது.
குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சர்வதேச மட்டத்திலும், ஐரோப்பிய ரீதியிலும், சுவிற்சர்லாந்துக்கு எனவும் பலமான விதிவரைமுறைகள் உண்டு. அவையெல்லாவற்றையும் மீறி 1970 ஆண்டிலிருந்து 1990 வரையிலான காலப்பகுதியில், இந்த மோசடிகள் நடைபெற்றிருப்பதாக இப்போது சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான விசாரணைகளின் முடிவில் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பிறந்த அநாதரவான குழந்தைகள் சுவிஸ் பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்களா? அல்லது தத்துக் கொடுப்பதற்காகவே பிள்ளைகள் பிரசவிக்கப்பட்டார்களா? எனச் சந்தேகங் கொள்வது வரை இப்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதிலே தத்தெடுத்த பெற்றோர்களின் விருப்பம் என்ன? தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பநிலை என்ன? மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் விதிமுறைகள் என்ன ? மீறியவர்கள் யார் ? என ஒன்றன் பின் ஒன்றாக தொடர் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இந்தக் கேள்விகளையெல்லாம் கடந்து நிற்பது, தத்துக்கொடுத்த பிள்ளைகளது பெற்றோரின் பரிதாபங்கள்.
மேற்குலகில் தத்துக் கொடுக்கப்படும் ஆசிய, ஆபிரிக்கக் குழந்தைகள் பரிமாற்றத்தில் பலத்த சந்தேகங்கள் பலகாலமாகவே எழுப்பப்பட்டு வருகின்றன. ஆசிய, ஆபிரிக்கப் பெற்றோர்களின் வாழ்வாதார வறுமை, குழந்தையில்லாத மேற்குல தம்பதியினரின் தேவை, என்பவற்றை மையமாக வைத்து நடக்கும் மனித வியாபாரம் இது எனவும், இதன் பின்னால் இயங்கும் தரகர்கள், அரசியற் புள்ளிகள், பரிமாறப்படும் பணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் எனும் கூற்றுக்கள் நீண்டகாலமாகவே உள்ளன.
இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட இந்தப் பிள்ளைகள் எங்கிருந்து பெறப்பட்டார்கள் என்ற விபரங்கள், தத்தெடுத்தவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டனவா?. வாழ்வாதார வளம் குறைந்த பெற்றோர்களிடமிருந்து இப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் யார் ? என்பவை குறித்து சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இது ஒரு சமூகப் பெருஞ்சோகம்.
பெரும்பாலும் இலங்கையின் தென்பகுதியிலும், மத்திய பகுதியிலும், வறிய குடும்பங்களிலிருந்து இவ்வாறு குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுகின்றன எனப் பரவலான அபிப்பிராயங்கள் உள்ளது. போரின் சூழல் இதனை மேலும் விரிவுபடுத்தியதா ? என்பது ஆய்வுக்குரியது. இதன் பின்னால் இருப்பது ஏழ்மை எனும் பெருந்துயரம். ஆனால் தற்போது எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களில் விருப்பத் தேர்வாகக் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டார்களா என்பது மனித வியாபாரம் குறித்ததானது. இது விரிவாக ஆராயப்பட வேண்டியது.
சமயப் பற்றும், கலாச்சாரப் பின்னணியும் நிறைந்த ஒரு தேசத்தில், பொருளாதார நோக்கில் பிறப்பு கவனிக்கபட்டிருக்கிறது, கையாளப்பட்டிருக்கிறது, என்பது மிகப்பெரிய அவலமானது. துயரமானது.