குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பழமையான மொழி தமிழா அல்லது சமசுகிருதமா?Elanganathan Kugan வட இந்தியர்கள் தமிழை ஏற்றுக் கொள்கிறார்களா?

Elanganathan Kuganathan  August 1, 2019

தொழில் முனைவோன் (2012–தற்போது வரை)

பன்னிரண்டாம் வகுப்பு புத்தகத்தில் தமிழை விடத் தொன்மையான மொழி சமற்கிரதம் (தமிழ் 2300 ஆண்டுகள், சமற்கிரதம் 4000 ஆண்டுகள்- தொன்மை) எனக் குறிப்பிடப்பட்டதனைத் தொடர்ந்து எது தொன்மையானது என்ற வழக்காடல் இடம்பெற்றுவருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலரே சமற்கிரதத்திற்காக பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டிருப்பதேயாகும். சமற்கிரதத்தின் தொன்மைக்காக வழக்காடுபவர்கள் எல்லோருமே அறிவியலிற்குப் புறம்பாக வெறும் புராணங்களையும், கட்டுக்கதைகளையும், புரட்ல்களையுமே சான்றாகக் கொண்டுள்ளார்கள். இவை பற்றிய ஒரு விளக்கமாகவே இப் பதிவு அமைந்துள்ளது.

மொழிப்_பெயர்க்_காரணம்

முடியுமானவரை நான் எனது ஆய்வுகளை பெயரிலிருந்தே தொடங்குவதனை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையிலேயே இதனையும் அணுகுவோம். முதலில் தமிழைப் பார்த்தால் தமிழின் பெயர் இயற்கையாகவே அமைந்துள்ளது. உள்ளே அமிழ்ந்து சுவையூட்டுவதால் அமிழ்து எனப்படும். இந்த `அமிழ்து` என்பதனையே மீண்டும் மீண்டும் விரைவாகச் சொன்னால் `தமிழ்` என அமையும்.

அமிழ்து, அமிழ்து……. தமிழ்`, தமிழ்`

(தமிழ் மொழிப் பெயர்க் காரணத்தினைக் குறிப்பு-1 இல் காண்க) இங்கு தமிழ் மொழிக்கான பெயர் விளக்கமானது இயற்கையுடன் ஒன்றி அமைந்துள்ளதனைக் காணலாம்.

அடுத்து சமற்கிரதத்தினைப் பார்ப்போம். சமற்கிரதம் என்பதற்கு செயற்கையாக நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதே பொருள்{‘Sanskrit’ is derived from the conjoining of the prefix ‘Sam’ meaning ‘samyak’ which indicates ‘entirely’, and ‘krit’ that indicates ‘done’}. எவ்வாறு நன்றாகச் செய்யப்பட்டது?. ஏற்கனவே இருந்த மொழிகளிலிருந்து சொற்களை ( Raw Form) எடுத்து, நன்றாக முழுமையாகச் செய்யப்பட்ட சொற்களே சமற்கிரத மொழிச் சொற்கள் (Refined Form ). இன்னமும் விரிவாகச் சொன்னால், இங்கு ஏற்கனவேயிருந்த பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளிலிருந்து எடுத்த சொற்களையும், தாம் ஏற்கனவே கொண்டு வந்த ஐரோப்பிய மொழிச் சொற்களையும் (இவை எல்லாமே பேச்சு வழக்கிலான சொற்களே) இணைத்து நன்றாகச் செய்யப்பட்ட மொழியே சமற்கிரதமாகும். இப்போது சொல்லுங்கள், சமைக்கப்பட்ட மொழி தொன்மையானதா? அல்லது அந்தச் சமையலிற்கே மூலப்பொருளான மொழி தொன்மாயானதா?

பேச்சுமொழி

பேச்சு வழக்கில் எந்தமொழி தொன்மையானது எனக் கண்டறிவது இலகுவானதல்ல, ஏனெனில் சைகை மொழியானது (அசைவு மொழி) சில வகையான ஒலிக்கோவைகளாக மாறிப் பின்னரே பேச்சுமொழியாகப் படிமலர்ச்சி பெறும். மேலும், பேச்சுமொழிக்கான தொல்லியல் சான்றுகளும் காணப்படமாட்டாது. எனவேதான் பேச்சு வழக்கிலான மொழிகளில் எது தொன்மையானது எனக் கண்டறிவது கடினமானது. இங்கு எங்களிற்குச் சார்பாக அமைந்துள்ள விடயம் யாதெனில் இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் உடற்கூறு ஆய்வுகள் போன்ற அறிவியல் முறைகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும், அது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டது என்பதும் ஐயத்திற்கு சிறிதும் இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது (குறிப்பு-2 காண்க). சிந்துவெளி நாகரிக எழுத்துகளிற்கும் (தொல் தமிழி) தமிழிற்குமுள்ள தொடர்புகளும் வெளிவந்துவிட்டன. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே பேச்சு வழக்கில் தமிழ் இருந்தது என்பது உறுதியாகிவிட்டது. சிந்துவெளி நாகரிகம் தழைத்தோங்கிய பகுதிகளில் இன்றைக்கும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் (கொற்கை, வஞ்சி, தொண்டை.... ) இருக்கின்றன.

இவ்வாறு ஏற்கனவே செழிப்புற்றிருந்த சிந்துவெளி நாகரிகத்தினை அப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஆரியர்களே அழித்தாக ஒரு கருத்து உள்ளது. இதனை ரிக் வேதம் (Rig vedda 1.51.11) `அசுரன் பிப்ருவின் கோட்டைகளை (Pur )இந்திரா ஆரியர்களிற்காக அழித்ததார்` எனச் சுட்டுவதாக வரலாற்றாசிரியர் டி.டி.கோசம்பி `இந்திய வரலாறு ஒரு அறிமுகம்` எனும் நூலில் (தமிழாக்கம் பக்கம் 150)குறிப்பிடுவார். இதனையே க.கைலாசபதி தனது `பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்` எனும் நூலில் “வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் மட்பாண்டங்களை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடுவது சிந்துவெளி நாகரிகத்தை அழித்தான் என்பதனையே குறிக்கும்” எனகின்றார் (பக்கம் 6). வேறு சில ஆய்வாளர்கள் வறட்சியால் சிந்துவெளி நாகரிகம் அழிந்த பின்பே ஆரியர் வந்தாகக் கூறுவார்கள். எது எவ்வாறாயினும் ஆரியர்கள் வரும்போதே இங்குள்ள மக்கள் மொழி அறிவுடனேயே இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது.

எழுத்து_வடிவம்

எழுத்து வடிவில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்பதே அறிவியல் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இலகுவானதும், நடைமுறை வாய்ப்பு உள்ளாதுமான ஒரு முறையாகும். ஆனால் இந்த முறையான ஒப்பீட்டிற்கு வரவே மாட்டார்கள். `பல்லில்லாதவன் தனக்கு பக்கோடா பிடிக்காது` என்ற மாதிரி தமது வேதங்கள் `எழுதா மறை` என்பார்கள் (உண்மையில் அது எழுத்து வடிவம் இல்லாத மறைகளே). ஏற்கனவேயிருந்த சிந்துவெளி (தொல் தமிழி) எழுத்து வடிவம், பிராகிரத பிராமி (அசோகர் கல்வெட்டு வடிவம்), தமிழி போன்ற வரி வடிவங்களிலிருந்து தமக்கு என ஒரு எழுத்து வடிவத்தினை (Sanskrit Nagari ) CE 1ம் -4ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்திலேயே உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் தேவநாகரி வரிவடிவம் CE 4ம் நூற்றாண்டிலேயே உருவானது {{Gazetteer of the Bombay Presidency at Google Books, Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30–45, particularly Devanagari inscription on Jayadaman's coins pages 33–34}. வழமையான எழுத்துப் பயன்பாடு 7ம் நூற்றாண்டிலேயே அவர்களிடம் ஏற்படிகின்றது {Kathleen Kuiper (2010), The Culture of India, New York: The Rosen Publishing Group, ISBN 978-1615301492, page 83

Richard Salomon (2014), Indian Epigraphy, Oxford University Press, ISBN 978-0195356663, pages 40–42}.

அவர்களின் எழுத்து வடிவத்திற்கு பல நூற்றாண்டுகளிற்கு முற்பட்ட தமிழி எழுத்து வடிவங்களிற்கான பல சான்றுகள் {அறிவியல்ரீதியில் சான்றுப்படுத்தப்பட்ட பல சான்றுகள்} எமக்கு இன்று கிடைத்துள்ளன (இது தொடர்பான செய்திகளை குறிப்பு3 இல் காண்க). எனவே தமிழியே எழுத்து வடிவில் தொன்மையானது என்பது யாருமே மறுக்கமுடியாது. இந்தியாவில் கிடைத்த பழங்கல்வெட்டுகளில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை தமிழிலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது.

மொழியின்_சிறப்பு

தொன்மை மட்டுமல்ல, மொழியின் சிறப்பிலும் தமிழே உயர்ந்தது. தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது. `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்ற தொல்காப்பிய விதியோ, தமிழ்மொழியிலுள்ள வேர்ச்சொல் விளக்கங்களையோ சமற்கிரதத்தில் எண்ணிப் பார்க்கவே முடியாது. எடுத்துக்காட்டாக Planet எனும் ஆங்கிலச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் (கோள்) - சமற்கிரதச்சொல் (கிரகம்) என்பவற்றினையே எடுப்போம். இங்கு கிரகம் என்பது ஆளுகைக்காரர் என்ற பொருளில் சோதிட நம்பிக்கையினையும், கோள் என்ற அறிவியற்சொல் தாமாக ஒளிராமல் விண்மீன்களிலிருந்து ஒளியினைக் கொள்வதால் {மின்னுவதால் ஏற்பட்ட மின்- `மீன்` ஆனது போல, கொள்வதால் ஏற்பட்ட கொள் - `கோள்`} கோள் என அறிவியலையும் சங்ககாலத்திலேயே பேசியுள்ளது. ஒரு புறத்தில் `பிறப்பொக்கும்` என சம-அறம் பேசும் தமிழ் எங்கே? `சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்` என சாதி முறையினைக் கடவுளே படைத்தாகக் கூறும் வடமொழி எங்கே? . மொழியின் பெருமை பேசினால் பதிவு நீளும் என்பதால் இத்துடன் முடிப்போம்.

இறுதியாக, மீண்டும் பாடப் புத்தகத்திற்கு வந்து, ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டது எனப் பார்ப்போம். உண்மையில் இது அறிஞர் George L. Hart என்பவரின் கருத்தாகும். அவர் சமற்கிரதத்தின் தொன்மையினைக் கணிக்கும் போது ஆரியர்களின் படையெடுப்பின் முதல் அலையான 4000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்தினையும் (BCE 2000) , தமிழின் தொன்மையினை தமிழி எழுத்துகளின் முந்திய கண்டுபிடிப்புக் காலத்தையும் (BCE 300 ) {உண்மையில் அதனையும் தாண்டிய பல தமிழி எழுத்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றினை BCE 300 இற்குள் அடக்கும் முயற்சி ஒன்று இந்திய நடுவண் அரசால் அசோகரின் கல்வெட்டினையே முந்தியதாகக் காட்ட மேற்கொள்ளும் முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது} கவனத்திற்கொண்டுள்ளார். அதாவது சமற்கிரத்தின் பேச்சு வடிவத் தொடக்க காலத்தையும் (BCE 2000 ), தமிழ் மொழியின் எழுத்துவடிவம் கிடைத்துள்ள காலத்தையும் (BCE 300) ஒப்பிட்டுத் தொன்மையினைக் கணித்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஒன்றில் இரு மொழிகளின் பேச்சுத் தொன்மையினை ஒப்பிட்டிருக்கவேண்டும் அல்லது சான்றுகள் அடிப்படையிலான எழுத்து வடிவத்தினையே ஒப்பிட்டிருக்க வேண்டும். அவரின் பிழையான ஒப்பீட்டினை அப்படியே பாடநூலில் உள்வாங்கியிருப்பதனை என்ன சொல்வது?. மோடியே தமிழே சமற்கிரதத்தை விட தமிழ் தொன்மையானது எனக் கூறியிருக்க (குறிப்பு 4), மோடியின் அடிமையான தமிழக அரசு இவ்வாறு பாடப்புத்தகத்தை வெளியிடுவதனை என்ன சொல்வது?

தமிழும்_சமசுகிரதமும்_இரண்டு_கண்களா?

இல்லை. இரண்டு கண்களேயானாலும் இரு காட்சிகள் காண முடியாது. பிற மொழிகளை அழிப்பதனையே தொழிலாகக் கொண்ட சமற்கிரதம் (மொழி பேசுவோர்) எவ்வாறு அழிக்க முயற்சிக்கப்படும் மொழியான தமிழுடன் ஒன்றாக முடியும். தமிழிலிருந்து மலையாளம் எவ்வாறு பிரிக்கப்பட்டது. கண் முன்னேயே வரலாறு உள்ளது. ஆதிக்கமொழியும், அற மொழியும் ஒரு போதும் ஒன்றாகமுடியாது. அவ்வாறு பேசுவோர்கள் ஒரு மறைமுகத் திட்டத்தினூடாக தமிழை அழிக்க/ சிதைக்கவே முனைவார்கள்.

சுருக்கமாகக் கூறினால், மேலே தமிழே சமற்கிரதத்தைவிடத் தொன்மையானது என மேலே மொழிப்பெயர், பேச்சு வடிவம், எழுத்து வடிவம் என்பவற்றைக் கொண்டு நிறுவினோம். மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே நாம் அதில் கவனம் செலுத்தி, தமிழை அறிவியல்-வாழ்வியல் முறைகளில் பயன்படுத்துவோம்.

குறிப்புகள் - 1. தமிழ் மொழிப் பெயர்க் காரணம்


Kuganathan VE


2. ஆரியரின் படையெடுப்பினைச் சான்றுபடுத்தும் மரபணுச் சான்றுகள்


How genetics is settling the Aryan migration debate


3. தமிழி தொன்மை இலங்கநாதன் குகநாதன்


4. மோடி `தமிழ் சமற்கிரதத்தை விடத் தொன்மையானது`


தொன்மையான மொழி தமிழை ஹைகோர்ட்டில் அனுமதிக்கலாம், ஹார்வேர்டு இருக்கைக்கு நிதி கொடுக்கலாமே மோடிஜி!


5 படம் 1


சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டு “ரிக்கு வில்லிசு” என்பவரின் பார்வைக்கு வந்தன.


XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 - கி.மு 2000 (4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர்.


செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :-


" கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்ந்து (அமிழ்ந்து) வந்த நக்கனியன் "

பொருள் :-

கூனயத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த 'சாய்ந்தகண் அப்புந்தி தண்கவிகை பண்ணன் ' என்பவனுக்கு காளண்ணன் என்னும் கப்பல் கட்டுபவன் புணையாக அதாவது உற்ற தோழனாக இருந்தான். காளண்ணன் கட்டிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியன் என்பதே இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.


6. ஆரியர்கள்+ சமற்கிரத வேர்


Fact check: India wasn't the first place Sanskrit was recorded – it was Syria