“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே”
இதில் நாம் கவனிக்கவேண்டியது, அந்தக்குப்பம் தற்போது கடற்கரையிலிருந்து 4 கி.மீ. மேற்கேயுள்ளது என்பதே. மேலும், இந்தப் பகுதி கெடிலம் ஆற்றின் பழைய வழித்தடமாக இருந்திருக்கும் என்பதை செய்கோள் பதிமங்கள் காட்டுகின்றன. ஆதலின் கரையேறவிட்டக்குப்பம் அன்றைய கெடிலம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருந்த கிராமமாக இருதிருக்கும் என எண்ண இடமுண்டு. கடந்த பன்னிரண்டு நூற்றாண்டுகளில் கடல் இந்தப் பகுதியில் 4 கி.மீ. பின்வாங்கியுள்ளது.
தொடர்ந்து தெற்கே செல்வோம். கடலூருக்கு தென்மேற்கேயுள்ள பெருமாள் ஏரியின் தென்கரையில் குண்டியமல்லூர் எனும் கிராமம் அருகே பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய புவியியல் ஆய்வுத் துறையை சேர்ந்த ஆய்வாளர்கள், பலஅடி கனத்திற்கு கடல் சிப்பிகள் உள்ளதைக் கண்டறிந்தனர்
. இந்த குண்டியமல்லூர் கிராமம் இன்றைக்கு கடற்கரையிலிருந்து பத்து கி.மீ. மேற்கேயுள்ளது. மேற்சொன்ன கரையேறறவிட்டகுப்பத்திற்கும், குண்டியமல்லுருக்கும் இடைப்பட்ட பகுதியில், சற்று கிழக்கே, சில ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற காரைக்காடு, மணிக்கொல்லை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் சங்க காலத்தில் கடற்கரையில் அமைந்திருந்தன என்று தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெருமாள் ஏரியை ஒட்டி, பறங்கிப்பேட்டைக்கு மேற்கே புதுச்சத்திரம், முட்லூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே கொத்தட்டை, சின்னக்கொமுட்டி போன்ற கிராமங்களில் கடற்கரைக்கு இணையாக, கடற்கரையோர மணல்மேடுகளின் எச்சங்கள் இன்றளவும் ஏராளமாகக் காணப்படுகின்றன. தற்போது மேற்சொன்ன இரண்டு இடங்களும் கடற்கரையிலிருந்து சுமார் 8-9 கி.மீ. உள்ளே தள்ளி இருக்கின்றன. இந்தப் பகுதியில் கடல் 8-9 கி.மீ.பின் வாங்கியுள்ளது என்பது இதனால் தெளிவாகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்- பிச்சாவரம் இவற்றிற்கிடையே நடந்த ஆய்வுகள், இன்றைக்கு 8 கி.மீ உள்தள்ளியுள்ள நடராஜபுரத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சதுப்பு நிலக் காடுகள் இருந்ததை தெரிவிக்கின்றன.
இதற்குச் சான்றாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை ஒட்டியுள்ள திருவேட்களத்தில் ஞானசம்பந்தர்பாடிய பதிகத்தில், மூன்றாவது பாடலைப் பார்ப்போம்.
“ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன்நகர்.”.....1.39.3
தொடர்ந்து இதே பதிகத்தில் வரும் நான்காவது பாடல்.
“தேன் நல் அம் கானலில் வண்டு பண் செய்ய விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே “ 1.39.4
இதைப்போன்றே, இன்றைக்கு சிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற தில்லையிலும் உப்பங்கழிகள் இருந்தன என்று ஞானசம்பந்தர் தன தேவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
“மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்......”8(தேவாரம் 1.80.3)
இந்தப் பாடல்கள் வாயிலாக, இன்றைக்கு 10 கி.மீ. கிழக்கேயுள்ள கடல் அன்று சிதம்பரத்தையும், திருவேட்களத்தையும் ஒட்டி இருந்திருக்கிறது; கடந்த 1300 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடல் 10 கி.மீ. பின் வாங்கியிருக்கிறது என அறிய முடிகிறது.
நாளை இன்னும் தெற்கே செல்வோம், ,,,குமரி முனை நோக்கி ....