இன்று பிற்பகல் கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற கெற்பெலி, மிருசுவிலைச் சேர்ந்த திரவியம் இராமகிருசுணன் (வயது 24) என்பவர் இராணுவத்தினர் நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்திருக்கின்றார்.
உடனடியாக முச்சக்கரவண்டி ஒன்றில் அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். ஒரு மணி நேரம் கடந்தும் வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகம் அளிக்கவில்லை என்றும் பின்னர் இளைஞர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அங்கு திரண்ட இளைஞர்கள் குழப்பத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிலமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு வைத்தியசாலைச் சூழல் பதற்றமாக காணப்படுவதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இளைஞருடன் சென்றபோது படையினரால் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞர்கள் மூவரும் எங்கே? சுட்டுக்கொன்ற இராணுவத்தினரை அங்கு அழைத்துவரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதேவேளை சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு விரைந்திருக்கின்றனர். வாகனங்கள் போக்குவரத்துக்களில் ஈடுபடமுடியாத அளவிற்கு பாதை முற்றாக வழி மறிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிளாலியில் இளைஞர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி ஏ-09 நெடுஞ்சாலையை முடக்கி பளையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவில் மணல் ஏற்றுவதற்காக உழவியந்திரத்தின் பெட்டியில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த இளைஞர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.
சம்பவத்தை அடுத்து அவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட பளை வைத்தியசாலை வளாகத்தில் திரண்ட உறவினர்களும் மக்களும் இராணுவத்தினருக்கு எதிராக குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இளைஞளை பளை வைத்தியாலையில் அனுமதித்த போது அங்கு வைத்தியர் இருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை படையினர் தமது துப்பாக்கியைப் பறித்துச் சுடமுயன்ற போது ஏற்பட்ட அசம்பாவிதத்திலேயே இவ்வாறான துப்பாக்கிச் சூடு நடந்ததாக படைத்தரப்பு மூலம் அறியமுடிகின்றது.