குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களின் ஆவணம்மைக்ரோ பிலிம் ஆக்கப்பட்ட 200 சுருள்கள் (ரீல்கள்)

யுனெசு(ஸ்)கோ அதிகாரிகள் மூலம் சுவிற்சர்லாந்து லுசேன் மாகாண கிளாரூசு(ஸ்) ஆவணக்காப்பகத்தில்  2003 இல் வைக்கப்பட்டது.30.01.2020....நேற்று (22.06.2016) குரும்பசிட்டி கனகரட்ணம் அவர்களின் நினைவு நாள். சமாதான காலப்பகுதியில் கிளிநொச்சி பொதுச்சந்தையின் பின் வீதியில் தமிழீழ ஆவணக்காப்பகம் ஒன்றினை அமைத்து அதில் தன்னு டைய ஆவணங்களை பாதுகாப்பு வந்தவர். என்ன தகவல் தேவை என்றாலும் எந்த சலிப்பின்றி இவரே தேடி எடுத்து தரும் ஐயாவை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருக்கவேண்டும்.

இவரை ஆவணங்களில் கடல் என்றே சொல்லலாம். காணக்கிடைக்காத பல ஆவணங்களை சேகரித்து வைத்திருந்த குரும்பசிட்டி கனகரட்ணம் ஐயாவும் ஒரு பெரும் களஞ்சியமே!

 

2012 இல் அவரது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

ஏன்? எதற்காக இந்த மைக்ரோ பிலிம்கள் (நுண்படச்சுருள்கள்)

எமது முன்னோர்கள் தங்கள் கால வரலாற்றை எழுதி வைக்கத் தவறியதால் அவர்கள் கால அரசியல் கலாச்சார வளர்ச்சியை, பொருளாதார கட்டமைப்பை அறிந்துகொள்ள முடியவில்லை. கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தின் எச்சமே இலங்கை என்கின்றோம். தகுந்த ஆதாரங்களை தேடினோமா? அகதிகளாக வந்த விசயனும் அவனது கூட்டாளி பரம்பரையினரும் நாடே நமக்குச்சொந்தமென்று கூறி கொக்கரிக்கிறார்கள். இல்லை. இது தவறு! என்று கூற என்ன ஆதாரங்களை வைத்திருக்கிறோம்?

தமிழரின் ஆரம்பகால வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால் சிங்கள பௌத்த துறவிகள் எழுதி வைத்த மகாவம்சம் போன்ற நூல்களைப் புரட்டிப்பார்பதை விட வேறு வழி எதுவும் எமக்குத் தெரியவில்லை. புத்த பிக்குகளோ பல்லாண்டு காலாமாக தமிழர் வரலாற்றை இருட்டடிப்புச் செய்தும், தவறுதலான கருத்துக்களை முன்வைத்தும் எழுதியவற்றையெல்லாம் நாம் நம்ப வேண்டுமா?

தமிழர்கள் தம் வரலாற்றைத் தரமெ எழுதிப்பதிவு செய்தால் தான் உண்மையான தகவல்களை பெறமுடியும். ஆனால் இப்போது கூட இந்த துறையில் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. எமக்காக எம் எதிரிகள் எழுதும் திரிபுவாதங்களை எப்படி நாம் உண்மையான வரலாறு என எடுத்துக்கொள்ளமுடியும்.

நான் உயர் கல்வி கற்கும் போது எமது சரித்திரப்பாட ஆசிரியர் இலங்கைத் தமிழர் வலாறு முழுமையற்றதாக முரண்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், பலகால வரலாறு எழுதப்படாத நிலையில் காணப்படுவதாகவும் இன்றைய மாணவர்கள் இத்துறையில் ஈடுபட்டு இன்றைய வரலாற்றையாவது பதிவு செய்வதுடன் பல நூல்களையும் வெளியிட வேண்டுமென்றும் இதை அவர்கள் தேசியக்கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுகொண்டது ஞாபகம் இருக்கிறது.

1956  ஆம்  இலங்கைத்தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாகும். இக்காலக்கட்டத்தில் இல்ஙகை பிரதமர் பண்டாரநாயக்கா சிங்கள மொழியினை மட்டும் அரச மொழியாக்கும் தமது திட்டத்தை பிரகடனப்படுத்தி பாராளுமன்ற்றத்திலும் அந்த மசோதாவை 1956 யூன் மாதம் 5 ஆம் நாள் கொண்டு வந்தார். இதை நாடெங்கிலும் உள்ள தமிழர்கள் தீவிரமாக எதிர்த்து ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அன்றைய முக்கிய எதிர்கட்சியான தமிழரசுக்கட்சி பாராளுமன்றத்துக்கு முன்னுள்ள காலிமுகத்திடலில் அமைதியான முறையில் மாபெரும் சத்தியாகிரகம் ஒன்றை நடத்தியது. சத்தியாகிரகிகள் சிங்களக் காடையர்களாலும் அரச ஆதரவாளர்களாலும் தாக்கப்பட்டனர். கற்கள் வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். மக்கள் பிரதிநிதி ஒருவர் உடைகள் கழையப்பட்டு உள்ளாடையுன் பக்கத்தே உள்ள கோட்டலுக்குள் ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. வட்டுக்கோட்டை பிரதிநிதி திரு. அ.அமிர்தலிங்கள் தலையில் பலத்த காயங்களுடன் பொந்துவில் பிரதிநிதி சனாப் முசுதபா பலத்த உடல் காயங்களுக்குள்ளும் உட்படுத்தப்பட்டனர். இவ்வளவு நிகழ்வையும் பார்த்துக்கொண்டும் காவல்துறையில் மௌனமாக இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

மறுநாள் யூன் 6 ஆம் திகதி இச்சம்பவங்கள் படங்களுடன் பத்திரிகைகளில் வெளியானபோது எனது பாடசாலை நாட்களில் அந்தச் சரித்திரப்பாட ஆசிரியர் கூறிய கருத்து ஞாபகத்திற்கு வரவே அன்றிலிருந்து பத்திரிகைச் செய்திகளை திரட்டத்தொடங்கினேன். இக்காலகட்ட்தில் கண்டியில் ஒரு நிறுவனத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தது எனது சேகரிப்புக்கு வசதியாக அமைந்தது.

1956 க்கு முன்னுள்ள காலப்பகுதி ஏடுகளை சேகரிக்க அங்குள்ள பழைய பேப்பர்கள் விற்கும் நாடார் கடைகளை நாடினேன். கரத்தை வண்டிகளில் பத்திரிகைகள் வந்து குவிந்தது. இவற்றை ஆண்டு வாரியாக பிரித்து தேவையான செய்திகளை அடையாளடிமட்டு திகதி பத்திரிகையின் பெயர்கள் எழுதப்பட்ட பின் அவற்றைக்கத்தரித்து பாரிய தாள்களில் ஒட்டிப்பதிவு செய்தேன். திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து பாரஊர்திகள் மூரம் பபைய பத்திரிகைகளை தருவித்தேன். எனக்கு உதவியாக ஒரு சிலரை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். எனது திருமணத்திற்கு பின் என் மனைவியும் ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உதவியதை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.

பழைய பத்திரிகைகளைச் சேரித்து வைத்தவர்களும் என் வேலைத்திட்டத்தை அறிந்து தம் சேகரிப்புக்களை தந்து உதவினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களை அணுகி உதவி கேட்ட போது பல்கலைக்கழக நூலகத்திலிருந்த பழம் பெரும் பத்திரிகைகளைப் பிரதி எடுக்குமாறு தந்துதவினார். அவர் தந்த ஏடுகள் 1889 ல் இருந்து தொடர்ச்சியாக இருந்தவை. எனது முயற்சிக்கு உதவிய முதல் பேராசிரியர் வித்தியானந்தன். பின்பு எனது கிராமம் குண்டு வீச்சால் தாக்கப்பட்ட போது பல்கலைக்கழகத்துக்கு அவற்றைத் தருவித்துப் பாதுகாத்து தந்த பெருந்தகையுமாவார். ஈழகேசரி என் ற பிரபல வாரஏடு 1930 இல் இருந்து 1957 வரை பிரசுரிக்கப்பட்ட அனைத்து இதழ்களையும் பிரதி எடுக்க குரும்பசிட்டு சன்மார்ன்ன சபை ஒத்துழைப்புத் தந்ததை இங்கு நன்றியுடன் குறிப்பிடவேண்டும். எனது இந்த வரலாறு திரட்டும் பணிக்கு கீழ்கண்ட தினசரி வார ஏடுகளை பயன்படுத்தியுள்ளேன்.

மோனிங் சு(ஸ்)டார்

இந்து ஓகன்

ஈழகேசரி(1930-1957)

வீரகேசரி

சுதந்திரன்(1952 இலிருந்து)

தினகரன்

டெய்லி நியூஸ்

சண், சற்றடே றிவ்யூ(முழுவதும்)

திசை(முழுவதும்)

ஈழநாடு

தினமுரசு (ஆரம்ப இதழிலிருந்து 2002 வரை)

தினபதி

சண்டேரைம்ஸ்

சண்டே ஒப்சேவர்

தினக்குரல்

சிந்தாமணி

ஐலண்ட்

கோட் சு(ஸ்)பிறிங்

மற்றும் நினைவில் இல்லாத பத்திரிகைகள் 10 ஆயிரம் வரையிலான பல்துறை கட்டுரைகள் 10 ஆயிரம் வரையிலான காட்டூன்கள், உலகத்தமிழர் தொடர்பான கட்டுரைகள், பத்திரிகை சேகரிப்புகளுமென எனது காப்பகத்தில் இடம்பெற்றன. பிரபல எழுத்தாளர் கனக.செந்திநாதனால் இலவசமாக தரப்பட்ட இலங்கையில் மறைந்த பத்திரிகைள் சஞ்சிகைகள் என்னால் திரட்டப்பட்டவை என 1000 மேற்பட்ட பிரதிகள் இடம்பெற்றிருந்தன.

1963 இல் முதல் தடவையாக எனது சேகரிப்பில் ஒரு பகுதி கல்முனையில் இடம்பெற்ற தமிழரசுகட்சி மாநாட்டில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதனை திறந்து வைத்து வாழ்த்தியவர் தமிழரசுத் தந்தை எனப்போற்றப்படும் திரு. செல்வநாயகம் அவர்களாகும்.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்படுத்தப்பட்ட கண்காட்சியில் அதனை ஆரம்பித்து வைத்தவர் வண.தனிநாயகம் அடிகளாராகும். இம் மாநாட்டுக்கு வந்த உள்;ர், வெளிநாட்டு அறிஞர்களால் எனது சேகரிப்புகள் பெரிதும் பாராட்டப்பட்டன.

1996 இல் கனடாவில் நடைபெற்ற உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டுக்கு அரசியல் சார்பற்ற ஆவணங்களை அரச அனுமதியுடன் எடுத்துச்செல்லப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன.

1997 பெப்ரவரியில் கனடாவிலிருந்து கடல் வழியாக நோர்வே நாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஆவணங்கள் நோர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டபோது நோர்வே நாட்டுப்பேராசிரியர்கள் பலரும் வருகைதந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இலங்கை கட்டனில் நடைபெற்ற மலையகச் சாகித்திய விழாவில் மலையகத்தமிழருக்கெனத் தனிப்பிரிவாக ஆவணக்கண்காட்சி நடைபெற்ற போது இந்திய உதவித் தூதுவர் வாழ்த்தியிருந்தார்.

வரலாறு இன்றேல் தமிழர் வாழ்வே இல்லை. வரலாற்றைத்திரட்டி வையகத்தில் தலைநிமிர்வோம் என்பது எமது தாரகமந்திரமாகும். இலங்கைத்தமிழர் வரலாற்றைத்திரட்டி அவற்றை மைக்ரோ பிலிம்களாக்கிப் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என்பதே எமது பேரவா. நாட்டின் பல பகுதிகளிலும், தமிழாராய்ச்சி மாநாட்டின் போதும் கனடா, நோர்வே நாட்டு அறிஞர்கள் பாராட்டி வழங்கப்பட்ட வாழ்த்துக்களையும் படங்களையும் இணைத்து நோர்வே நாட்டு இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி எனது சேகரிப்புகளை மைக்ரோ பிலிமாகக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட போது நோர்வே தூதரகம் தாம் எழுதியது எனது முயற்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல் அமைந்தது. இரண்டு ஆண்டுகள் அவர்கள் உதவி கிடைத்ததை இங்கு நன்றியுடன் குறிப்பிடவேண்டும்.

2003 ஆம் ஆண்டு நான் சுவிற்சர்லாந்து சென்ற போது யுனெசு(ஸ்)கோ அதிகாரிகளைச் சந்தித்து மைக்ரோ பிலிம் ஆக்கப்பட்ட 200 சுருள் (ரீல்களைப்) பாதுகாப்புக்கும் மக்கள் ஆய்வுக்குமாக வைக்க முடியுமா? எனக் கேட்டபோது அவற்றை இலவசமாகத் தருவதாயின் தாம் பெற்றுக்கொள்ளவதாக கூறினார்கள். நான் இலங்கை திரும்பியதும் அவற்றை அனுப்பி வைக்க அவர்கள் அங்குள்ள லுசேன் மாகாண கிளாரூசு(ஸ்) ஆவணக்காப்பகத்தில் அவற்றைப்பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

என்னால் பதிவு செய்யப்பட்ட இலங்கைத்தமிழர் வரலாறு 1889 ஆம் ஆண்டிலருந்து ஏப்பிரல் 2011 வரை மைக்ரோ பிலிம்களாக திரட்டப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இச்சேகரிப்புகள் இக்காலகட்டத்தில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்கைளையும்; உள்ளடக்கியதாக காய்தல் உவத்தலின்றி பல பக்க கருத்துக்களையும் அரச செய்திகள் உட்பட பிரதி பலிப்பனவாக அமைந்துள்ளன. மைக்ரோ பிலிம் பிரதிகள் ஏறத்தாழ 500 ஆண்டுகள் வரை பேணமுடியும். புதிய பிரதிகளாக மாற்றவும் ஒன்றிற்கு மேற்பட்ட பிரதிகளை உருவாக்கவும் முடியும்.

தமிழ்நாட்டுக்கு 2008 ஆம் ஆண்டு அகதியாக வந்த போதும் இலங்கைத்தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தி மைக்ரோ பிலிமாக்கும் பணி தொடர்கிறது. ஏறத்தாழ 300 பிலிம்களை இதுவரை பதிவு செய்துள்ளோம். ஒரு குடும்பத்துடன் உன்னத நன்கொடையாக எம் எதிர்கால சந்ததிக்கு இவற்றை விட்டுச்செல்வதில் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியடைகிறோம். குரும்பசிட்டி கிராமத்தின் எல்லையில் இருக்கும் பலாலி இராணுவ முகாமில் இருந்து நடு இரவுகளில் நடந்த தொடர் குண்டு வீச்சால் விளக்குகளுடன் பனந்தோப்புகளுக்குள் நானும் என் மனைவியும் குழந்தைகளும் ஓடிப்பதுங்கிய காலகட்டத்தில் எமது ஆவண சேகரிப்புகளைப் பல்கலைக்கழக நூலகத்தில் பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது 2 ஆண்டுகள் வரை பாதுகாத்து தந்தவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த பெருந்தகை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள். மற்றும் பேராதனை பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர் திரு. எசு.பத்மநாதன் அவர்கள் எமக்கு முதுகெலும்பாக இருந்து உதவியவர். பின்பு சேகரிப்புகளை அரச கப்பல் மூலம் கொழும்புக்கு இலவசமாக அனுப்பி த்தந்தவர் அரச அதிபராக இருந்த திரு.பத்மநாதன் அவர்கள். இவர்கள் உதவிகளை இங்கு பதிவு செய்வதுடன் எமது மனங்கனிந்த நன்றியையும் காணிக்கையாக்குகிறோம்.

நிறைந்த பணச்செலவில் இந்த மைக்ரோ பிலிம்களின் மூலப்பிரதிகளை வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புக்கருதி பேணிப்பாதுகாத்து வருகின்றோம்.——

குரும்பசிட்டி இரா. கனகரட்ணம்

திருமதி. பவளராணி கனகரட்ணம்

இது தொடர்பாக   எனக்கு தெரிந்த  தகவலாக....1997 இல் சுவிற்சர்லாந்தில் உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக மத்தியகுழு நிர்வாகிகளின் கூட்டம்  நடைபெற்றபோது இந்த ஆவணம்  உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்க உடமை என்று ஒருவர் முன்மொழிந்து  2 மணி நேரமாக  விவாதம் நடைபெற்றது. எனக்கு மனதில் குழப்பமாக இருந்தது மூத்தகுழு உறுப்பினர்களி டமும், 25  ஆண்டுகால தலைவரான இரா.வீரப்பனாரிடமும் அனுமதி  பெற்று  அமைப்பிற்கு எந்தவகையில் உரிமை,  இந்த  ஆவணங்களை யார் சேகரித்தது? அவரா?  இல்லை அமைப்பா? இதற்கு பதில் தாருங்கள் அறத்தின்படி  முடிவெடுக்கலாம் என்றேன். இரா .வீரப்பனாரே சொன்னார் முருகவேள் அது குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்கள்தான்  திரட்டினார, தயாரித்தார் என்றார்  அப்படி என்றால் இது  பற்றி 2 மணிநேரம் விவாதித்தது வீண் என்றேன்.  இதற்கு அமைப்பு உரிமைகோரமுடியாது என்றேன். வீரப்பனையாவும் அதுதான் சரி இதை இப்படியே  விட்டுவிடுவோம் என்று மறுதலைப்பிற்கு சென்றார். இதனை 2004 இல்  பண்டிச்சேரி மாநாட்டில்  குரும்பசிட்டி கனகரத்தினம் ஐயா கூறுகையில் இத்தகைய சர்ச்சையை தாங்களே உருவாக்கி தாங்களே கைவிட்டார்கள் என்றார்.இருவருமே மிக அமைதியாக தன்மையினர் அவர் நல்ல செயற்பாட்டாளர்.