12.0.2019 சங்கரலிங்கனார் சென்னை மாகாணதிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 1956 சூலை 27ஆம் நாள் சாகும் வரை உண்ணாநிலைப் போரைத் தொடங்கினார். 64-வது நாளின் போது கம்யூனிசுட் கட்சி ஏடான ” சனசக்தி” துணையாசிரியர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களுக்கு வேதனையோடு முதல் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு .
“காங்கிரசு ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது . காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை. காங்கிரஸ் – காந்தியத்திற்காக உழைத்தும் , அவர்கள் என் உண்ணாவிரதத்தில் கூட உதவி செய்யத் தவறிவிட்டார்கள். கம்யூனிசுடு கட்சி உதவி செய்கிறது . வெற்றி கிடைத்தால் வாழ்கிறேன் அல்லது சாகிறேன்.”
செப்.29ஆம் நாள் “கம்யூனிசுடு இயக்க சகோதரர்களுக்கு” எனத் தலைப்பிட்டு இறுதிக் கடிதம் பின்வருமாறு எழுதினார் ;
” பட்டினியாலும் பல்வேறு பசியாலும் வாடும் ஏழை மக்கள் என் மனக்கண் தோன்றி கண்ணீர் வடிக்கின்றனர். இது வீண் போகாது. இன்று முதல் அசதி அதிகம், பேச சக்தி குறைவு, கூடிய சீக்கிரம் சாவு ஏற்படும், பூ வேண்டாம், பூ மாலை வேண்டாம், கெளபீனம் கட்டுவது போதும், பாடையில் குளிர்ந்த நேரம் எடுத்துச் செல்லுங்கள், காந்தி தங்கிய ஆத்துக்கரை மண் மேட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்ப மரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள். அந்த இடத்தில் என் சடலத்தை அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள். எல்லோரும் வணக்கம், வந்தே மாதரம்.
ஆண்டவன் ஆத்மன், க.பெ.சங்கரலிங்க நாடார்
மேலும். தம் இறப்பிற்குப் பின் உடலை கம்யூனிசுடு கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சங்கரலிங்கனார் கேட்டுக் கொண்டார்.
காமராசர் தலைமை வகித்த ஆளும் காங்கிரசுக் கட்சி இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அவரின் உடல் நிலை மோசமடைந்தால் மதுரை எர்சுகின் (இன்றைய அரசு இராசாசி மருத்துவ மனை) மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்த காரணத்தால், 62 வயது நிரம்பிய சங்கரலிங்கனார் 79-வது நாளில் 13.10.1956 அன்று உயிர் துறந்தார். மதுரையில் உயிர் துறந்ததால் அவரின் இறுதி விருப்பம் நிறைவேறவில்லை. அங்குள்ள தத்தனேரி சுடுகாட்டில் ௧ம்யூனிசுடு கட்சியினரால் எரியூட்டப்பட்டார். சங்கரலிங்கனாருக்கு இறுதி நிகழ்வைச் செய்த கம்யூனிசுடு கட்சி அப்போது ஒன்றுபட்ட கம்யூனிசுடு கட்சியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை அப்போது அக்கட்சி ஆதரித்து வந்தது.
1964இல் அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டு மார்க்சிசுட் கட்சி உருவானது. அக்கட்சி இன்று வரை மார்க்சிசுட் கட்சி “தமிழ்மாநிலக் குழு” என்று அழைக்கப்படுகிறதே தவிர , மார்க்சிசுட் கட்சி “தமிழ்நாடு குழு ” என்று அழைக்கப்படுவதில்லை. இது சங்கரலிங்கனாருக்கு செய்திடும் பச்சைத் துரோகமாகும். சங்கரலிங்கனாரை “நாங்கள் தான் எரியூட்டினோம்” என்று மார்தட்டிக் கொள்வதை மார்க்சிசுடுகள் இனியாவது நிறுத்திக் கொள்வார்களா?
நன்றி; அ.பெரியார் எழுதிய “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்”.