25.06.2019-மலேசியத் தமிழ்வளம் தந்த மகிழ்ச்சி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மலேசியத் தமிழாசிரியர்களுக்கான
இலக்கியப் பயிலரங்கம் ,கோலாலம்பூர்
'டைனசுடி 'விடுதி (Hotel Dynasty)
அரங்கில் 2015 சூன் 11-13 மூன்று
நாள்கள் நிகழ்ந்தன. தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகப் பேரா.தெ.
வெற்றிச்செல்வனும் நானும்
கருத்தாளர்களாகப் பங்கேற்றோம்.நாடு கடந்து வாழும் தமிழோடும்
தமிழாசிரியர்களோடும் கலந்துபழகும்
வாய்ப்பு ,பெருமகிழ்வைத் தந்தது.
பயிலரங்கப்பொறுப்பாளர்கள்
திரு.இராசன்ஆறுமுகம் (அரசன்) , திரு.
மூர்த்தி முதலியோர் நன்றிக்குரியோர்.
மலேசியஅமைச்சர்கள்திரு.கமலக்கண்ணன்,
திரு.சுப்பிரமணியம் இருவரும்
பயிலரங்கில் பங்கேற்றுச் சிறப்பு
சேர்த்தனர். சிறப்பு விருந்தினர்களோடு
உணவருந்துவது மலேசிய அமைச்சர்கள்
வழக்கம். எங்களோடு இயல்பாகத்
தமிழ், தமிழர் செய்திகளைப் பேசியபடி
உணவருந்தி மதிப்பளித்தனர்.
பயிலரங்கு நிறைவுற்றபின் , மலேசியாவின்
பல மாநிலங்களிலும் நான் சொற்பொழி
வாற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள்
சூன்21வரைதொடர்ந்தன.
மலேசியத்தமிழ்நெறிக்கழகத்தலைவர்
திரு.இரா.திருமாவளவன் அவர்கள் ,
சிறப்பாகத் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை
அமைத்திருந்தார்.
பத்துமலை, கசாங்கு, கோலகுபுபாரு,
மேரு ,கிள்ளான்,செரம்பான்,தெளாக்கு
எனத் தொடர்ந்த நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து நினைவுகூர்கிறது மனம் !
ஐயா வளவன்- சாந்தி குடும்பம்,
திரு.அருள்முனைவனார் -
திரு.மாரியப்பனார் குடும்பம்,
தெள்ளியர்ஒன்றியம்திரு.எழில்குடும்பம்,
பாடகர் கதிரவன் குடும்பம் ,
'ஓம்தமிழ்' தொலைக்காட்சி
திரு முகிலன்- முல்லை குடும்பம் ,
வழக்கறிஞர் கனல்வீரன்- தமிழரசி
குடும்பம் -முதலான தமிழ் தழைத்த
குடும்பங்கள் காட்டிய அன்பும் பரிவும்
வியப்பானவை!
திரு.செல்வம் - கலா இணையரின் அன்பு
ததும்பும் இல்லம் , அவர்கள் குடும்பத்தில்
ஒருவராய் என்னை ஏற்றுப் புரந்தது.
அவர்களின் மக்கள் மாவேந்தன்,
புகழ்வேந்தன்,நிலவேந்தன் மூவருக்கும்
நான் தாத்தா ஆனேன். மூவரின்
தாத்தாவும் பாட்டியும் தந்த உபசரிப்பில்
திளைத்தேன்.
மலேசியாவில் கோ.சாரங்கபாணியார்,
குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார்,
மணி வெள்ளையனார்,இர.ந.வீரப்பனார்,
தனிநாயக அடிகளார் , சீனி நயினார்
முகமது -முதலிய முன்னோடியர்
ஊன்றிய தமிழ்ப்பயிர் வளர்ந்து
செழித்துள்ளதற்காகத் தமிழுலகம்
மகிழ்ச்சியடையலாம்.