யாழ்.மாவட்டத்தில் அண்மைக் காலமாக நடைபெறும் சம்பவங்கள் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு கொடூரமான நிகழ்வாக அமைகின்றது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனத் தமிழ்க் கலாசாரத்திற்கு எட்டாக் கனியாக இருக்கும் அனைத்து அட்டூழியங்களும் தற்போது யாழ்.மண்ணைத் தொட்டு நிற்கின்றது.
இதில் வயது வேறுபாடின்றிக் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் சாதாரணமாக நடந்தேறுவது ஒரு துரதிஷ்டவசம் என்றே கூற வேண்டும்.
இது இவ்வாறிருக்கக் கடந்த காலங்களில் தமிழர்களின் திருமணங்கள் பய பக்தியுடன் நடைபெற்றன. ஆனால் தற்போது கண்டவுடன் காதல், கல்யாணம் என இளைஞர், யுவதிகளின் இள இரத்தத்தின் துடிப்பு இல்லற வாழ்வைத் துவசம் செய்து விடுகின்றன.
கணவன் என்றால் கண்கண்ட தெய்வம் எனக் காலில் விழுந்து வணங்கியது எமது தமிழினப் பெண்கள் தான் என நாம் மார்தட்டிச் சொல்லுவதுண்டு.
ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக மாறி, மேலைத்தேயக் கலாசாரம் கலந்து தாலி கட்டிய அடுத்த நாள் நீதி கேட்டு நீதிமன்ற வாசலில் வரிசையில் நிற்கின்றனர் புதுமணத் தம்பதிகள்.
திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என எமது மூதாதையர்கள் சொல்லுவதுண்டு. அதனையே தற்காலத்திலும் நாம் பிரயோகித்து வருகின்றோம்.
ஆனால் தற்போது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் அடுத்த நாள் நீதிமன்றம் செல்கின்றது. என்ன செய்வது? எமது கலாசாரத்தின் பிறழ்வுத்தன்மைக்கு யார் மீது குற்றஞ்சுமத்துவது எனத் தெரியாது தமிழினம் கலங்கி நிற்கின்றது.
காலம் பதில் சொல்லும் வரைக் காத்திருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் எங்களால்...?
நயினை நாகபூசணியின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் சிங்களவர்!!! வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாளாந்தம் அலைகடல் என மக்கள் வருகை தருவது அதிகரித்து வருகின்றது.
இதில் தென்பகுதியில் இருந்து வரும் சிங்கள மக்களின் அளவு மிக மிக அதிகமாகவே காணப்படுகின்றது. இப் பகுதியில் விகாரை இருப்பதுவே இதற்குக் காரணம் எனலாம்.
இவ்வாறு விகாரைக்கு விஜயம் செய்யும் சிங்கள மக்கள் நயினை நாகபூசணித் தாயையும் தரிசிக்கத் தவறுவதில்லை.
அவ்வாறு தரிசிக்க வரும் சிங்கள மக்கள் தாங்கள் அணிந்திருக்கும் பாதணிகளை ஆலயத்திற்குள் போட்டுக் கொண்டு செல்வதும், அல்லது ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்வதும் ஆலயத்தின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது.
ஆனால் இவ்வாறு பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் மக்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என ஒரு வயதுபோன ஐயா வழமையாக கூறிக் கொண்டிருப்பார்.
இருந்தும் அவரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுச் சிலர் பாதணிகளை ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்கின்றனர்.
அல்லது தாங்கள் கொண்டு வரும் பைக்குள் பாதணிகளைப் வைத்துக் கொண்டு அப்படியே ஆலயத்திற்குள்ளும் செல்கின்றனர்.
அவ்வாறு கழற்றி விட்டுச் செல்லும் பாதணிகளை இந்த ஐயா தான் வைத்திருக்கும் தடியால் தட்டி விடுவதும் வழமை. இவ்வாறு நாளாந்தம் நடைபெறுவது வழமையாகி விட்ட ஒன்று.
இருந்தும் முழுக்க முழுக்க நாம் சிங்கள மக்கள் மீது குறைகூறுவது தவறான விடயம். ஏனென்றால் இந்து ஆலயங்களின் நடைமுறைகள் சிங்கள மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே அதனை நாம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் விளங்கப்படுத்திப் பதாகைகளைத் தொங்க விடுவது கட்டாய தேவையாகும். இதனை ஆலய பரிபாலன சபை முதன்மைப்படுத்தி செய்ய வேண்டிய ஒன்றாகும்.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு சார்பாக இந்திய நீதிமன்றத்தில் தீர்ப்பு
24.09.2011அகதிகள் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனியான சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே துவாரகா நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த சந்திரகுமார் (வயது 39) என்பவர், போலிக் கடவுச்சீட்டு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற போது புதுடெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆறு மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
சிறிலங்காவில் தனக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று அவர், இந்திய அரசின் நாடுகடத்தும் முயற்சிக்கு எதிராக துவாரகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை துவாரகா மெட்ரோ பொலிற்றன் மஜிஸ்ரேட் நீதிபதி அருள் வர்மா கடந்த 20ம் நாள் வெளியிட்டார்.
இந்தத் தீர்ப்பில் சந்திரகுமாரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன்,
“ பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அகதிகளை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. அகதிகளை வரவேற்கும் இந்தியா, அவர்களுக்காக தனியான சட்டம் இயற்ற முன்வராதது வருந்தத்தக்கது.
அகதிகளைக் கட்டாயப்படுத்தி தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் முடியாது.
அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றுவது அவசியம் என்று இந்திய சட்ட ஆணையமும், தேசிய மனிதஉரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு அகதிகளுக்கு தனியான சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று நீதிபதி அருள் வர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதிட்ட சட்டவாளர் முத்துகிருஸ்ணன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
“திகார் சிறையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது.