21.09.2011-திருவள்ளுவராண்டு.2042-அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைக்காணுமாறு இந்திய, அமெரிக்கா, போன்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பாண்டிருப்பில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்பு பற்றிப் பேச வேண்டும் என்ற அழுத்தங்களும் அரசுக்கு விடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபை தேர்தலில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.
அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்கும் என்று நம்புகின்றோம். தவறினால் ஜனநாயக ரீதியாக எம் மக்களை அணி திரட்டி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளத் தயங்கோம் என்றும் மாவை சேனாதிராசா கூறினார்.
சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும் அதனை பேச்சுவார்த்தையில் சம்பந்தப்படுத்தாமல் பேச்சுவார்த்தை என்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம்.
எமது அடிப்படைக் கோட்பாடுகளிலோ, கொள்கைகளிலோ எந்தவித விட்டுக்கொடுப்புகளும் இல்லாத நிலையில் எமக்கு அரசியல் தீர்வை நிறைவு செய்வதற்கு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு கூட்டமைப்பு பேச்சு மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என நாம் நம்புகின்றோம் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அவ்வாறு இந்த ஆண்டு முடிவதற்குள் அரசின் பதில்சரியாகக் கிடைக்காவிட்டால் நாம் சர்வதேச அரங்கிலும், எமதுமக்கள் மத்தியிலும் கருத்துக்களை முன்வைத்து எம் மக்களை ஜனநாயக ரீதியாக அணி திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் இயங்கத் தயங்கமாட்டோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம் இளைஞர் சமுதாயம் மிகவும் கட்டுப்பாட்டுடன் எம்முடன் அணி திரள வேண்டும் என கோருகின்றோம் என்றார்.