இதற்கு மேலாக நீங்கள் யதார்த்தத்தோடு செயற்பட்டீர்கள் என்பதும் உங்களால் எழுதப் பட்ட கடிதங்கள் நியாயமானவை என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். தமிழ் அரசியல் தலைவர்களில் துணிச்சலாகப் பேசக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் உங்களிடம் அதிகம் உண்டென்பதில் மாற்றுக்கருத்திற் கிடமில்லை. இருந்தும் விடுதலைப்புலிகளை குறைகூறுவதில் நீங்கள் அதீதமாக செயற்பட்டமையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கூறித்தான்ஆகவேண்டும். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நீங்கள் கண்டித்தீர்களாயினும் மறைமுகமாக அவர்களுக்கு எதிராக எந்த கெடுதியும் செய்யவில்லை என்ற உண்மை உணரப்படுகின்றது. அதேநேரம் விடுதலைப்புலிகளை மறைமுகமாக வஞ்சித்தவர்கள் வெளிப்படையாக ஆதரித்தனர். அரசியலில் இதுவும் ஒரு தந்திரம் போலும். அதனால் அவர்கள் இப்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவற்றின் விளைவுதான் தமிழ் மக்களின் இன்றைய அவலம்.
பரவாயில்லை. நடந்தவை - கடந்தவை - முடிந்தவையாக இருக்கட்டும். இப்போது தமிழ் மக்களுக்கு அவசரமான தேவை எங்கள் அரசியல் தலைமைகளின் போக்கு பற்றிய விளக்கமாகும். எங்கள் அரசியல் தலைமைகள், சரியான பாதையில் பயணிக்கின்றனவா என்பதை நீங்கள் அறியாமல் - உணராமல் இருக்கமுடியாது. எனவே அரசியல் கட்சி என்ற எல்லை கடந்து தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டை விளக்குகின்ற பணியை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
தமிழ்மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கும் இவ்வேளையில், எங்களை ஏமாற்ற ‘ஓநாய்கள்’ காத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், எங்கள் தமிழ் மக்களை காப்பாற்ற வியூகம் அமைப்போம். அதில் உங்களைப் போன்றவர்களின் அரசியல் அனுபவப் பகிர்வு மிகவும் அவசியம். அதனை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.