18 .09.2011 மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கு காலக்கெடு விதித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் சாதகமான அபிவிருத்தியை எட்ட வேண்டுமென பிரித்தானியா அறிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான தீர்வுகளை இலங்கை முன்வைக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கம் உரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறினால் ஏனைய உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையும் செனல்4 ஊடக ஆவணப்படமும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அழுத்தங்களின் மூலம் பலவந்தமாக விசாரணைகள் நடத்தப்படுவதனை விடவும் இலங்கையாகவே பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தினால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையும் என பிரி;த்தானியா நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.