பாகிசுதான் தீவிரவாதிகள் இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் – சிதம்பரம்
16.09. 2011 பாகிசுதானைச் சேர்ந்த தீவிரவாதிகள்
இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு குறிப்பாக தமிழக மாநிலத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையை களமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிசுதான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வழமையாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.
பாகிசுதானிலும், ஆப்கானிஸ்தானிலும் அதிகளவான தீவிரவாத இயக்கங்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கி வரும் மூன்று முக்கிய தீவிரவாத இயக்கங்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக கிடையாது என குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவ முயற்சி செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.