இதனால் சிறிலங்கா விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
முதல் இணைப்பு
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, நிபுணர்குழு தயாரித்த அறிக்கையை விரைவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நகர்வு சிறிலங்காவை அனைத்துலக விசாரணைகளுக்குக் கொண்டு செல்லக் கூடும் என்று ‘வொய்ஸ் ஒவ் அமெரிக்கா‘ தகவல் வெளியிட்டுள்ளது.
கடந் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் அடுத்த சில நாட்களில் கையளிக்கலாம் என்றும் ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்ததுடன், இதுபற்றி விசாரிக்க அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதிக்க இணங்கிய பின்னரே ஐ.நா பொதுச்செயலரால் விசாரணை ஒன்றுக்கு ஆணை வழங்க முடியும் என்றும் ‘வொய்ஸ் ஒவ் அமெரிககா‘ தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா விவகாரத்தை சேர்க்கிறது ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளதாக ‘ரொய்ட்டர்‘ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனாலும் அடுத்த ஆண்டு வரை இந்த அறிக்கை தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டரிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்கள் முறைசாரா கலந்துரையாடல் குறித்த மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், பாரிய மனிதஉரிமை மீறல்கள் , மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறிய அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பர்லெய்ன், சிறிலங்கா அதனைத் தானாகவே செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நம்பகமான முறையில் அவர்கள் (சிறிலங்கா) அதனைச் செய்யாது போனால், அனைத்துலக சமூகம் அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.