மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கெதிராக தமிழக அரசு செயலிறங்கும் என்றும் கருத்துத் தெரிவித்த மேற்படி மூத்த பத்திரிகையாளர், நீதிமன்றினால் இன்றைய வழக்கு ஏற்றுக் கொள்ளப்படும் போது நெறிமுறைகள், நடைமுறைகள் என்பனவே இந்த வழக்கை ஓராண்டிற்கு மேலாக எடுத்துச் செல்லும் என்றும் அந்தக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட முடியாது என்றும் தெரிவித்தார்.
நடைமுறைப் பிரகாரம் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டி மரண தண்டனையை ஆயுட் தண்டனையாக்கும் படி முடிவெடுத்து அல்லது ஒட்டு மொத்த சட்டசபையின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற அதனை ஆளுநரிடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆளுனர் அந்தத் தீர்மானத்தை ஏற்க வேண்டுமெனவும் இது கூடிய விரைவில் இடம்பெறும் சாத்தியக் கூறு உண்டென்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அதற்கு முதற்கட்டமாகவே மரண தண்டனைக்கெதிரான பொதுவான நிலைப்பாட்டை தமிழக அரசு எட்டும் என்றும் ஹாஸ்யம் தெரிவித்த மேற்படி பத்திரிகையாளர், மரண தண்டனையை இந்தியாவில் இல்லாமல் செய்வதில், குறிப்பாக தமிழகத்தில் இல்லாமல் செய்வதில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருமே உதவி செய்தவர்களாக வரலாற்றில் பதியப்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நளினி உள்ளிட்ட நால்வரின் மனுக்களும் கையளிக்கப்பட்ட போதும் கலைஞர் கருணாநிதி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து தமது அமைச்சின் நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தாமல் அம் மனுவை நேரடியாக அப்போதைய ஆளுநர் பாத்திமா பீபியின் முடிவிற்கென அனுப்பி வைத்தார். அதன் போது நளினியின் கோரிக்கையை மாத்திரம் ஏற்ற ஆளுனர் முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்தார்.
ஆனால் இந்த முறை ஒட்டுமொத்தக் கட்சிகளின் ஆதரவுடனும் அ.தி.மு.க அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயலும் என்றும் இது ஆரோக்கியமான ஒரு வளர்ச்சியென்றும் மேற்படி பத்திரிகையாளர் தெரிவித்தார்.
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் யாரும் குறுக்கிட முடியாது: சுப்ரமணிய சுவாமி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதிகள் மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் யாரும் குறுக்கிட முடியாது என சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் 9ம் திகதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்கு மேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது.
மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும் என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.