தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்ற இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்திய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா போரம் சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின்போது இலங்கையில் இருந்து சென்று கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் இராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து அவசரமாக அகற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன.
'தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத் தினரின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அடியோடு விரும்பவில்லை. சிவில் நிர்வாகம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் கீழ் அமைதியான முறையில் வாழவே மக்கள் விரும்புகிறார் கள். இதனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்து விளக்கியிருக்கிறோம்.
கடந்த காலங்களைப் போல இந்தியா நழுவல்போக்கைக் கொண்டிருக்காமல் இது தொடர்பில் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டிருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இலங்கை அரசுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பாக தமிழ் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவது நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்திய ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் இந்தக் கல்துரையாடலுக்கான அழைப்பை ஈழத் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுப்பி இருந்தார்.
தமிழரசுக்கட்சியில் இருந்து மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஆனந்தசங்கரி,பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் இரா. துரைரத்தினம்.சிறீதரன், ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணியில் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ரெலோவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் கந்தையா சிவநேசன், பெனடிக்ற் தனபால சிங்கம், ஈ.என்.டி.எல்.எப். பரந்தன் ராஜன், தமிழ் காங்கிரஸில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன்,ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி சார்பில் ன சேகரன் இரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதுடில்லியில் நேற்றும் நேற்றுமுன்தினமும்நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடல் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல் குறித்து மாவை
கலந்துரையாடல் குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சேனாதிராஜா,இரண்டு தினங்களும் சுமூகமான முறையில்கலந்துரையாடல் நடைபெற்றது. நேற்று இந்தியாவின் பல்வேறு கட்சிகளையும் சார்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தமிழர் தாயகத்தின் தற்போதைய நிலையை நாம் அவர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்து விளக்கினோம். எமது பிரதேசங்களில் அண்மைக்காலமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ நெருக்குவாரங்கள், சிங்களக் குடியேற்றங்கள் என்பவை குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளபோதும் சில பிரதேசங்களில் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை சிவில் நிர்வாக விடயங்களில் இராணுவத் தலையீடு அதிகமாக உள்ளது இதனை எமது மக்கள் அடியோடு விரும்பிவில்லை இராணுவம் தமது நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்தியத் தரப்புக்கு மிகவும் இறுக்கமாக எடுத்துக்கூறியிருக்கிறோம்.
தமிழர் பிரதேசங்களில் சிங்கள வியாபாரிகளின் குடியேற்றம், கடற்பரப்பில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல் ஆகியன அளவு கடந்து சென்றுகொண்டிருப்பதையும் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறோம். இவை அனைத்துக்கும் இராணுவமே காரணம் என இந்தப் பேச்சில் கலந்துகொண்ட அனைத்துத் தமிழ் கட்சிகளும் கூட்டாக இந்தியத் தரப்பிடம் எடுத்து விளக்கி இருக்கிறோம்.
இந்தியா கடந்த காலங்களைப் போல நழுவல் போக்கை கொண்டிராமல் இந்த விடயத்தில் மிகவும் இறுக்கமான போக்கைக் கையாண்டு இலங்கை அர_க்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறோம்.இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு இந்தியா காலம் தாழ்த்தாது முனைப்புடன் செயற்படவேண்டும் எனவும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டோம். இது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் நாளை (இன்று) நடைபெறும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவாதத்தில் வலியுறுத்துவதாக அவர்கள் இந்தப் பேச்சின்போது தெரிவித்தனர் எனவு மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.