மக்கள் மனங்களை வென்றாரா?
.........................................................
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகி விட்டது. தமிழகத்தில் இனி எவருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது கூட்டணி ஆட்சிதான் என்று எல்லோரும் ஆருடம் கூறிய நிலையில் மிகப் பெரிய தனிப்பெரும்பான்மை ஆட்சியைப் பெற்றார். திமுகவுக்கே கடந்த முறை இப்படியான ஒரு வெற்றியை தமிழக மக்கள் வழங்காத நிலையில் ஜெயலலிதாவுக்கு அள்ளிக் கொடுத்தனர். ஆனால் அவர் அதை எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதே கேள்வி. இலங்கை விவாகரத்தில் அவர் அனைவரின் மனங்களையும் வென்றிருக்கிறார். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகப் பெரும் சவாலாக விளங்குகின்ற ஈழத் தமிழர் விவாகரத்தை பேசாத கட்சிகளே இல்லை எனலாம். ஆனால் ஏனைய எல்லாக் கட்சிகளையும் ஓரம் கட்டி விட்டு. இன்று ஈழத் தமிழர்களுக்கு நானே பொறுப்பு என்பது போல இரண்டு அதிமுக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். அத்தோடு தன்னை விமர்சித்த கோத்தபய ராஜபக்ஷே தொடர்பாக கருத்துத் தெர்வித்த போது இந்திய அரசை கடுமையாகக் கண்டித்தார். ஈழ மக்கள் சம உரிமையும், சமத்துவமும் பெரும் வரை நான் ஓய மாட்டேன் என்று அவர் அறிவித்திருப்பதிலிரிந்து தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களும் உலகெங்கிலும் உள்ள தமிழார்வலர்களும், புகலிட ஈழ மக்களும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக முதல்வரின் இந்த முயற்சிகளைக் குழப்பவும். சிதறடிக்கும் நோக்குடனும் இலங்கை அரசின் திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் டில்லியில் அங்கீகரிக்கப்படாத பேச்சு வார்த்தை நாடகம் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தனிக்கதை. இதை எல்லாம் மீறி ஈழ மக்களுக்கு செய்ய நினைக்கும் ஜெயலலிதா அவர்களுக்காக விரைவில் அரசியல் சமத்துவத்துக்கான கோரிக்கைகளை முன் மொழிய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஈழ விவாகரத்தில் அனைவரின் நன் மதிப்பைப் பெற்ற ஜெயலலிதா சமச்சீர் கல்வி விஷயத்தில் கோடிக்கணக்கான பெற்றோரின் கசப்பை சம்பாதித்துக் கொண்டார் என்பதே உண்மை. உலகில் எங்குமே இல்லாதவாறு நால்வகை கல்வி முறையை தமிழக மாணவர்கள் கற்கிறார்கள். அதை எல்லாம் கட்டுப்படுத்தி பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் சகல மாணவர்களையும் கொண்டு வருவதுதான் சமச்சீர் கல்வித் திட்டம். ஆனால் அதை ஜெயலலிதா தனது பரம எதிரி கருணாநிதியின் திட்டமாகத்தான் பார்த்தாரே தவிற உண்மையில் இதில் கோடிக்கணக்கான மக்கள் பலன் அடையப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத் தவறி விட்டார். தமிழகம் முழுக்க புற்றீசல் போல முளைத்து விட்ட தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையில் சிக்கி கோடிக்கணக்கான பெற்றோர்கள் அருவறுப்படைந்திருக்கிறார்கள். சமச்சீர் கல்வி வந்தாலே கட்டணக்கொள்ளையை நினைத்தது போல தொடர முடியாத தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வியை எதிர்த்தன . இதைப் புரிந்து கொள்ளாத ஜெயலலிதா தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக களமிரங்கினார். இறுதியில் நீதிமன்றம் மூலம் போராடி சமச்சீர் கல்வி உரிமை வென்றது. அந்த வெற்றியை தமிழகம் முழுக்க அரசுப் பள்ளி மாணவர்கள் கிராமப்புற மாணவர்களும் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். இப்போது வேறு வழியின்று சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.
ஊரிகளில் சாதிப்பெயர் நீக்கம்.
........................................................
தமிழகத்தில் சாதி மோதல்களும் தீண்டாமைக் கொடுமைகளும் அதிகம். வட இந்தியாவில் உள்ளது போன்று தலித்துக்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தும் வழக்கம் தமிழகத்தில் இல்லை என்றாலும்.சாதி வேறுபாடு காட்டுவதும் தலித் மக்களின் கலாசார சிவில் உரிமைகளை பறிப்பதும் தொடரும் கதை. முன்னர் திமுக ஆட்சியில் பேருந்துகளின் தலைவர்களின் பெயரை நீக்கும் ஒரு உத்தரவு வந்தது. காரணம் குறிப்பிட்ட சாதித் தலைவர்களின் பெயரைக் கொண்ட பேருந்துகள் இன்னொரு சாதியினரின் ஊருக்குள் செல்லும் போது அதுவே மிகப்பெரிய கலவரமாக மாறி விடுகிறது. தவிறவும் மக்கள் முன்னேற்றம், சுதந்திர போரட்டம் என்று போராடிய தலைவர்களின் பெயரைக் கூட அவர் எந்த சாதியைச் சார்ந்தவரோ அந்த சாதியினர் எந்த மாவட்டத்தில் அதிகம் வாழ்கிறார்களோ அந்த மாவட்டத்திற்கு வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த பகுதியில் வாழும் சிறுபான்மை சாதியினர், அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான் வன்முறைகளுக்கு இது ஒரு காரணமாக அமைந்ததால் தலைவர்களின் பெயரை நீக்கும் உத்தரவைப் பிறப்பித்தது திமுக அரசு. இப்போது ஊர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது தமிழக அரசு. ஊர்களில் உள்ள சாதித் தலைவர்களின் பெயரை நீக்கி விட்டு தூய தமிழ் பெயர்களை கிராமங்களுக்கு வைக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். இதற்காக அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும். முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது அரசு. முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகச் சிறந்த நடவடிக்கையாகும். அது போல பல ஆயிரம் கோடிச் செலவில் கட்டப்பட்ட நவீன பிரமாண்ட மாளிகையான புதிய தலைமைச் செயலகத்தை ஏழை மக்கள் மருத்துவத்திற்காக அர்ப்பணித்தது உள்ளிட்ட ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்திருக்கும் ஜெயலலிதா தமிழ் பண்டிதர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றியதை ரத்து செய்து மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றியிருக்கிறார். இது ஒரு தவறான நடவடிக்கையாகும். இந்து மரபா? தமிழ் மரபா? என்ற போட்டியில் ஜெயலலிதா இந்து மரபிலிருந்து ஒரு நிலை எடுக்கும் ஜெயலலிதா. திராவிட இயக்க சிந்தனை மரபில் தனித்து நடக்கும் தமிழகத்தில் கடந்த காலத்தில் அவர் ஆடு,மாடு பலியிடும் தடைச் சட்டம் கொண்டு வந்த போது மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.