22.08.2011த.ஆ.2042-இலங்கையின் மேற்குக் கடல்பகுதி முழுவதிலும் மீன்பிடித் தொழிலுக்குத் தடைவிதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் தோண்டி எடுக்கப்பட உள்ள மன்னார் கடல் பகுதியில் மீன்பிடியைத் தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.
மன்னார் கடல்படுகையில் மீன்பிடி தடை செய்யப்பட்டால் அதனால் தமிழ் மீனவர்களே அதிகளவில் பாதிப்புக்களை எதிர்கொள்வார்கள் என்றும் எதிர்காலத்தில் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி வரும் என்றும் கடல்துறை மற்றும் கடல்தொழில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். எண்ணெய்ப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகக் கப்பல் துறைப் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கடற்படையினரின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தப் பகுதியில் நிறுத்தும்படி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மன்னார் கடல் படுகையில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசம் 8 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டாவது வலயம் இந்திய எண்ணெய் அகழ்வு நிறுவனமான கரெய்ன் இந்தியாவின் இலங்கைக் கிளைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் 2008 ஜுலை 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்குள் 10 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்கு இந்த நிறுவனம் இலங்கை அரசுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. எனினும் கடந்த மாதமே அது தனது பணியை ஆரம்பித்தது. இருப்பினும் முதலாவது எண்ணெய்க் கிணற்றில் இருந்து வர்த்தக ரீதியிõன எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்கு இன்னும் 4 ஆண்டுகள் செல்லும் என்று தெரிகிறது.
எண்ணெய் உற்பத்தி மூலம் இலங்கைக்கு பெரிய வருமானம் எதுவும் கிடைக்காது என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், எனினும் கடல் வளம் உள்ள மன்னார் கடலில் மீன்பிடியைத் தடை செய்வதன் மூலம் அரசு மிகப் பெரிய வருமான இழப்பைச் சந்திக்கும் என்று எச்சரிக்கின்றனர். அத்துடன் கடல்தொழிலையும் மீன்பிடியையும் நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.