இந்நிலையில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கடந்த 1957ம் ஆண்டு முதல் கடந்த 2011 வரை நடந்த 13 பொதுத்தேர்தல்களில், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே மாறிமாறி வெற்றிவாகை சூடியுள்ளன. 8 முறை திமுகவும், 5 முறை காங்கிரசும் வென்றிருக்கிறது. குறிப்பாக, கடந்த 1996ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை இத்தொகுதியில் திமுகவே வெற்றியை தக்க வைத்திருக்கிறது.திருவண்ணாமலை தொகுதியில் இதுவரை ஒருமுறைகூட அதிமுக வென்றதில்லை. இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 1957, 1963, 1971, 1977ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்ற முன்னணி தலைவர்களில் ஒருவரான ப.உ.சண்முகம், 1980ம் ஆண்டு அதிமுக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் திமுகவின் வலிமை காரணமாக அவரால் வெற்றிபெற இயலவில்லை.
அதிமுகவுக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் காரணமாக, கடந்த 1980ம் ஆண்டுக்கு பிறகு, திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் தவிர்த்தது.
என்றாலும், 2006ம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் நகராட்சித் தலைவர் பவன்குமாரும், கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரனும் இத்தொகுதியில் போட்டியிட்டனர். தோல்வியை தழுவினர். அதுமட்டுமல்ல அதன்பிறகு, அவர்களின் அரசியல் வாழ்வும் சரிந்தது. எனவே, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவது அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து என்ற ‘சென்டிமென்ட் பீதி’ அதிமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவினரிடம் ஆர்வம் குறைந்திருக்கிறது.